இந்தியாவின் பொருளாதாரம் சரிவு அடைந்து வருவதாக இங்குள்ள எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சி அபாரமாக இருப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விரைவில் அமெரிக்க நிதி அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதாரம்
கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் மீண்டு உள்ளதாகவும் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று நம்புவதாகவும் அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெல்லன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனுடன் பேச்சுவார்த்தை
டெல்லியில் நவம்பர் 11 ஆம் தேதி அமெரிக்க - இந்திய பொருளாதார நிதி ஒத்துழைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இருப்பதாக கூறியுள்ள அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெல்லன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மீண்ட பொருளாதாரம்
இது குறித்து நேற்று அவர் அமெரிக்க செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா பாதிப்பின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் ஆனால் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா மீண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அன்னிய முதலீடு
அன்னிய நேரடி முதலீடுகளை இந்திய அதிக அளவு ஈர்த்துள்ளது என்றும் இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் அமெரிக்கா வலுவான நல்லுறவை கொண்டுள்ளது என்றும் மேலும் வர்த்தக தொடர்பு அதிகப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக தொடர்பு
அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாடுகளிடையே வர்த்தக தொடர்பு அதிகரித்தால் இரு நாட்டு மக்களும் பயனடைவார்கள் என்றும் சர்வதேச விதிகளிலும் இருநாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன என்றும் ஜெனட் யெல்லன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு ஆதரவு
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது மிகச் சிறந்த அம்சம் என்றும் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.