பல லட்சம் இந்தியர்களின் கனவாக இருக்கும் ஹெச்1பி விசா-வுக்கான 3வது லாட்டரி தேர்வு நடந்து முடிந்துள்ளது. அமெரிக்க அரசு 2022ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசாக்களைத் தற்போது அளித்து வரும் நிலையில், இந்த வருடத்திற்கான விசா எண்ணிக்கையை முழுமையாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காகச் சில தளர்வுகளைக் கொடுத்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களும், ஐடி ஊழியர்களும் அதிகம் நம்பியிருக்கும் ஹெச்1பி விசா வழங்கும் லாட்டரி தேர்வு இந்த வருடத்தின் கடைசி முறையாக இது இருக்கலாம்.
அமெரிக்கா
அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2022ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா எண்ணிக்கை முழுமையாக வழங்க இந்த 3வது லாட்டரி சேர்வில் சற்றுக் கூடுதலாக விண்ணப்பங்களைத் தேர்வு செய்துள்ளதாகவும், உயர் படிப்பு கட்டுப்பாடுகளை நீக்கி அதிக விண்ணப்பங்களைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
லாட்டரி தேர்வு முறை
மேலும் நவம்பர் 19ஆம் தேதியன்று அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை அமைப்பு தனது லாட்டரி தேர்வு முறையின் கீழ் ஆரம்பக் கட்ட விண்ணப்ப தேர்வை செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி வருகிற நவம்பர் 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 23, 2022ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது.
ஹெச்1பி விசா
எப்போதும் அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை அமைப்பு போதுமான விண்ணப்பத்தை முதல் லாட்டரி தேர்விலேயே பெற்று விடும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை 2021ல் 2வது கட்ட தேர்வில் போதுமான விண்ணப்பத்தைப் பெறாத காரணத்தால் 3வது லாட்டரி தேர்வு நடந்துள்ளது. இது எப்போதும் நடக்காத ஒன்றாகக் கூறப்படுகிறது.
65,000 ஹெச்1பி விசா
அமெரிக்க அரசு ஒவ்வொரு வருடமும் 65,000 ஹெச்1பி விசா வழங்கும், இதோடு 20,000 விசா மேற் பட்ட படிப்பு முடித்தவர்களுக்காகக் கொடுக்கப்படும். இந்த விசா-வை கைப்பற்றத் தான் அதிகப்படியான ஐடி ஊழியர்களும் ஐடி நிறுவனங்களும் போராடி வருகிறது.
இந்தியர்கள் ஆதிக்கம்
தற்போது நடக்கும் விசா விண்ணப்ப தேர்வுகள் அனைத்தும் 2022ஆம் நிதியாண்டுக்கானது, 2021ஆம் நிதியாண்டில் அமெரிக்க அரசு சுமார் 2,75,000 விசா விண்ணப்பத்தை வெறும் 85000 விசாக்களுக்குப் பெற்றது. இதில் 65 சதவீத விசா விண்ணப்பங்கள் இந்தியர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.