பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலங்களின் கடன் அளவை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல பிரிவுகளில் புதிய வர்த்தகத்தையும், வருவாயும், வேலைவாய்ப்புகளையும் ஈர்க்க துவங்கியுள்ளது.
இது மட்டும் அல்லாமல் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவிலான ஜிடிபி-ஐ தமிழ்நாடு எட்ட வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் தற்போது உத்தர பிரதேசமும் இறங்கியுள்ளது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டை விடவும் வேகமாகவும் முன்கூட்டியே 1 டிரில்லியன் டாலர் ஜிடிபி-ஐ அடைய வேண்டும் என திட்டமிட்டு அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச அரசு 2027 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற திட்டமிட்டு உள்ளது. மேலும் இந்த இலக்கை அடைய உதவும் வகையில், ஆலோசகராக செயல்பட அமெரிக்காவின் டெலாய்ட் இந்தியா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
யோகி ஆதித்யநாத்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது என்று உத்தரப் பிரதேச மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட மாநிலமாக விளங்கும் உத்தர பிரதேசம் அம்மாநிலத்தின் வளர்ச்சி பொறுப்பை டெலாய்ட் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
டெலாய்ட் இந்தியா
ஜூலை 19ஆம் தேதி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் டெலாய்ட் இந்தியா நிறுவனத்தை ஆலோசகராக நியமிக்க மாநில அரசு முடிவு செய்தது. உயர் அதிகாரம் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2027-ல் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
இப்போது உத்தர பிரதேசத்தின் நேரம் வந்துவிட்டது, மாநிலத்தின் முழு திறனையும் சிறந்த முறையில் பயன்படுத்தி, நாட்டின் பல பரிமாண வளர்ச்சிக்கு மாநிலம் மிக முக்கியமான தளமாக மாற வேண்டும் என உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் 2027 ஆம் ஆண்டுக்குள் உத்தரப்பிரதேசம் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் "சப்கா சாத், சப்கா விகாஸ்" கொள்கைக்கு ஒரு அளவுகோலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.
90 நாட்கள்
அடுத்த 90 நாட்களில், டெலாய்ட் இந்தியா, துறை வாரியான ஆய்வை மேற்கொண்டு முழுமையான ஆலோசனையுடன் எதிர்கால செயல் திட்டத்தை முன்வைக்கும். இந்த செயல் திட்டத்தை தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஆய்வு செய்த பின்பு அதை அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யும் என தெரிகிறது.