வேதாந்தா குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தொழிற்சாலை தமிழகத்தில் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் அதாவது சுமார் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
வேதாந்தா குழுமம் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மிகப் பெரிய தொகை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிய வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் இந்த முதலீட்டின் மூலம் என்ன செய்யப்போகிறது என்பதை தற்போது பார்ப்போம்.
வேதாந்தா குழுமம்
வேதாந்தா குழுமம் டிஸ்ப்ளே ஃபேப்ரிகேஷன், செமிகண்டக்டர்கள் மற்றும் செமி கண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் வசதிகளில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வேதாந்தா குழுமம் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகியவை இணைந்து புனேவுக்கு அருகில் உள்ள தலேகான் என்ற பகுதியில் 1,000 ஏக்கர் நிலத்தில் மேற்கண்ட முக்கிய பிரிவுகளுக்காக முதலீடு செய்யவுள்ளன.
மிகப்பெரிய முதலீடு
மகாராஷ்டிரா மாநில அரசின் செய்திக்குறிப்பின்படி, வேதாந்தா மற்றும் ஃபாக்ஸ்கான் இணைந்து ரூ.1லட்சம் கோடியை டிஸ்ப்ளே ஃபேப்ரிகேஷனிலும், ரூ.63,000 கோடி செமி கண்டக்டரிலும், ₹3,800 கோடி செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை வசதிகளிலும் முதலீடு செய்யவுள்ளன.
முதல்வருடன் சந்திப்பு
வேதாந்தா மற்றும் ஃபாக்ஸ்கான் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், இந்த திட்டம் தொடர்பாக மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை சந்தித்தனர். இந்த திட்டத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசு முழுமையாக ஒத்துழைத்து ஆதரவளிக்கும் என்று முதல்வர் ஷிண்டே தூதுக்குழுவிடம் உறுதியளித்தார். இந்த முதலீடு மாநிலத்தின் வருவாயை பெருக்குவதுடன் வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்று கூறினார்.
மின்னணு சிப் ஆலை
இந்த ஆண்டு பிப்ரவரியில், வேதாந்தாவை சேர்ந்த குழு ஒன்று புனே சென்று மின்னணு சிப் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. வேதாந்தா குழும நிறுவனங்கள் அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் கீழ் செமி கண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி அலகுகளை அமைக்க விண்ணப்பித்திருந்தன.
செமிகான் இந்தியா
எலக்ட்ரானிக் உற்பத்தியை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் மற்றும் நாட்டில் வலுவான மற்றும் நிலையான செமி கண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, மத்திய அமைச்சரவை 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.76,000 கோடி செலவில் செமிகான் இந்தியா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்திய செமிகண்டக்டர் சந்தை 2026ஆம் ஆண்டுக்குள் நான்கு மடங்கு அதிகரித்து 63 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
5 நிறுவனங்கள் விண்ணப்பம்
செமிகான் இந்தியா திட்டம், ரூ.153,750 கோடி மொத்த முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப்களுக்கான ஐந்து விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. வேதாந்தா-ஃபாக்ஸ்கான், IGSS வெண்ட்சர்ஸ் pte சிங்கப்பூர் மற்றும் ISMC ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்த நிறுவனங்களில் முக்கியமானவை ஆக்கும்.