கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வந்த நிலையில், கர்நாடகாவில் தற்போது அடுத்தடுத்து இரண்டு பெரிய முதலீடுகள் செமிகண்டக்டர் சிப் துறையில் குவிந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் இதேவேளையில் செமிகண்டக்டர் சிப் உற்பத்திக்கும், செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் 2வது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
செமிகண்டக்டர் சிப்
செமிகண்டக்டர் சிப் பிரிவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட வேதாந்தா குழுமம் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கர்நாடகாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி
கடந்த ஒரு மாதமாக வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆய்வு செய்து வந்த நிலையில் கர்நாடகாவை தேர்வு செய்து அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை செய்து வந்த நிலையில் incentives குறித்த ஆலோசனையில் தற்போது பேச்சுவார்த்தை நிற்கிறது.
20 பில்லியன் டாலர்
அனில் அகர்வால் கட்டுப்பாட்டில் உள்ள வேதாந்தா குழுமம் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் கூட்டணியில் உருவாகும் இந்தச் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலைக்காகச் சுமார் 20 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது.
4 பில்லியன் டாலர் ஊக்கத்தொகை
இந்நிலையில் முதலீட்டு மதிப்பில் 20% அதாவது 4 பில்லியன் டாலர் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வடிவில் திரும்ப வேண்டும் என்று வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசு தற்போது 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சலுகையாக அளிக்க வேண்டுமா என்பது தான் தற்போதைய பிரச்சனை.
கர்நாடக அரசு
வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி தொழிற்சாலையை அமைக்க பொருத்தமான இடத்தைக் கண்டறிந்து, போதுமான தண்ணீர், நிலையான மின்சார விநியோகம் மற்றும் திட்டத்தை விரைவாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க உதவுவதாகக் கர்நாடக அரசு உறுதியளித்துள்ளது.
ISMC அனலாக் பேப்
மே மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டை அடிப்படையாகக் கொண்ட ISMC அனலாக் பேப் (ISMC Analog Fab) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கர்நாடகாவில் புதிய செமிகண்டக்டர் சிப் தயாரிப்புத் தளத்தை அமைக்க அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ISMC சுமார் 22900 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணியின் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை 2வதாகும்.