இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகிய வேதாந்தா நிறுவனம் தனது ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து காலி செய்தது என்பது தெரிந்தது.
இதனை அடுத்து மற்ற மாநிலங்களில் புதுப்புது தொழிற்சாலைகளை நிறுவி வருகிறது.
அந்த வகையில் குஜராத்தில் வேதாந்தா நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து 20 பில்லியன் டாலர் மதிப்பில் செமிகண்டக்டர் ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
வேதாந்தா லிமிடெட் நிறுவனம்
வேதாந்தா லிமிடெட் நிறுவனம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. தைவானின் ஃபாக்ஸ்கான் உடன் இணைந்து 20 பில்லியன் டாலர் மதிப்பில் ன் இந்த ஆலையை தொடங்கவுள்ளது.
செமிகண்டக்டர் ஆலை
வேதாந்தா நிறுவனம் குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலைகளை உருவாக்க மூலதனச் செலவு, மலிவான மின்சாரம், நிதி மற்றும் நிதி அல்லாத மானியங்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அகமதாபாத்
இந்தத் திட்டமானது குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத் அருகே அமைக்கப்பட இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்திடம் கேட்கும் சலுகைகள்
செமிகண்டக்டர் ஆலையை தொடங்குவதற்காக வேதாந்தா நிறுவனம் 99 ஆண்டு குத்தகைக்கு 1,000 ஏக்கர் நிலம், 20 ஆண்டுகளுக்கு சலுகை விலையில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை கோரியிருப்பதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கோரிக்கைகளுக்கு குஜராத் அரசு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வேதாந்தா பதிலளிக்க மறுப்பு
ஆனால் இந்த செய்தி குறித்து வேதாந்தாவின் செய்தி தொடர்பாளர் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தினர் பதிலளிக்கவில்லை. அதேபோல் குஜராத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரியும், முதல்வர் பூபேந்திரபாய் படேலின் அலுவலகத்தில் உள்ள மற்றொரு அதிகாரியும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.