பில்லியனர் அனில் அகர்வால் கட்டுப்பாட்டில் உள்ள வேதாந்தா நிறுவனம், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் இருந்து டீ லிஸ்ட் செய்ய கொள்கை ரீதியான ஒப்புதலை பெற்றுள்ளது.
அதெல்லாம் சரி முதலில் டீ லிஸ்ட் என்றால் என்ன? ஒரு நிறுவனப் பங்கு, பங்குச் சந்தை பட்டியலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவதை டீலிஸ்ட் என்கிறார்கள்.
சரி எதற்காக ஒரு நிறுவனம் டீ லிஸ்ட் செய்யப்படுகிறது? என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம்.
டீலிஸ்ட் என்றால் என்ன?
அதோடு ஒரு பங்கு இரண்டு காரணங்களுக்காக டீலிஸ்ட் செய்யப்படலாம். ஒன்று கம்பெனியே பங்குதாரர்களிடம் இருந்து அதன் பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.
இரண்டாவது, சில விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக, செபி அல்லது பங்குச் சந்தைகள் (என்எஸ்இ / பிஎஸ்இ) பங்கு வர்த்தகத்தைத் தடை செய்யலாம்.
முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகள்
இதில் வேதாந்தா முதல் வகையை தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே, இந்திய பங்கு சந்தையில் இருந்து வெளியேறி, தனியார் நிறுவனமான மாற இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் முன்னணி சுரங்க தொழில் நிறுவனமான வேதாந்தாவுக்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளும் உள்ளன. வேதாந்தா நிறுவனத்தின், 50.1% பங்குகள், தற்போது அதன் தாய் நிறுவனமான, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் வசம் உள்ளது. மீதமுள்ள, 49.9% பங்குகள் பொது சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் வசம் உள்ளன.
லண்டன் பங்கு சந்தையில் வெளியேற்றம்
2018ல், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம், லண்டன் பங்குச் சந்தையிலிருந்து முழுமையாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதாந்தா என்பதும் கவனிக்கதக்கது. இந்த நிலையில் தற்போது வேதாந்தா நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து முழுமையாக வெளியேற திட்டமிட்டுள்ளது.
ஏலம் என்று?
இந்த நிலையில் வேதாந்தா அக்டோபர் 5ம் தேதி பங்குகளை பெறுவதற்காக ஏலத்தினை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது அக்டோபர் 8 வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த முடிவினை கடந்த மே மாதமே வேதாந்தா அறிவித்திருந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது.
விலை எவ்வளவு?
இதன் மூலம் பொது பங்கு தாரர்களிடம் இருக்கும் 49.49% அல்லது 183.98 கோடி பங்குகளை திரும்ப பெற உள்ளது. ஒரு பங்கின் விலையானது 87.50 ரூபாய்க்கு வாங்க உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் சிலகாரணங்களால் சந்தையை விட்டு வெளியே செல்ல விண்ணப்பிக்கும். இவற்றில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றும் பட்சத்தில், செபி(SEBI) அந்த நிறுவனத்தை வெளியே செல்ல அனுமதிக்கும். இதன் படி தான் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.