தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் சரிந்துள்ளன. இதனை அடுத்து அங்கே சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் குறிப்பிட்ட நிமிட இடைவெளியில் 7.1 மற்றும் 7.5 ஆகிய ரிக்டர் அளவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் இந்த நிலநடுக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

முதல் நிலநடுக்கம் 7.1 என ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. இது மோரோன் (Morón) நகருக்கு மேற்கே கரீபியன் கடற்கரை பகுதியில் சுமார் 13 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. அடுத்த நிலநடுக்கம் 7.5 என ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. இதுவும் மோரோன் நகருக்கு தென்மேற்கே 16 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இந்த அதிர்வுகள் பலமாக உணரப்பட்டன. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், வீடுகளில் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலா நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி காண்போரை பதை பதைக்க வைக்கின்றன.
அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து போர்டோ ரிக்கோ மற்றும் அமெரிக்க, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், வெனிசுலா கடற்கரைக்கு அருகில் உள்ள தீவுகளுக்கும் (அருபா, குராக்கோ மற்றும் போனாய்ர்) ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது. இருப்பினும், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
கராகஸில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன; வீடுகளும் சரிந்துள்ளன,என உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்தார். ஸ்பெயினிடமிருந்து வெனிசுலாவின் சுதந்திரத்தை உறுதிப்படுத்திய 1821-ஆம் ஆண்டின் ராணுவ வெற்றியை நினைவுகூறும் பொது விடுமுறை நாளை மக்கள் கொண்டாடி கொண்டிருந்த வேளையில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
"மிகவும் பலத்த சத்தத்துடன் கட்டிடங்கள் குலுகின. வீட்டில் இருந்த பொருட்களும், குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த ஜாடிகளும் கீழே விழுந்தன. என் வாழ்நாளில் இவ்வளவு மோசமான நிலநடுக்கத்தை பார்த்தது இல்லை என கராகஸில் வசிக்கும் 56 வயதான கோரோ மார்டினெஸ் என்பவர் ஏபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கிழக்கு கராகஸின் நகராட்சிப் பகுதியான சாகாவோவில், இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நகராட்சியின் மேயர் குஸ்டாவோ டுக்யூ குளோபோவிஷன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்; இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை. அதிகப்படியான மக்களைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், என மேயர் தெரிவித்ததக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே அதிக உயிரிழப்புகளும் பெரும் சேதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது; மேலும் இந்த பேரிடர் பரவலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், என கூறிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS), உயிரிழப்பு எண்ணிக்கை 10,000 முதல் 1,00,000 வரை இருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட மதிப்பீட்டை வெளியிட்டது.
காராகஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம், நிலநடுக்கத்திற்குப் பிந்தைய சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்ததுடன், அந்நாட்டில் உள்ள குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், சேதமடைந்த பகுதிகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியது.இதற்கிடையே வெனிசுலா அதிபர் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடப்பதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

