சிக்கலில் உள்ள தொலைத் தொடர்பு துறையில், ரிலையன்ஸ் ஜியோ தனது மொபைல் கட்டணத்தை 40 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது. எனினும் அதற்கு பதிலாக 300 மடங்கு சலுகை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் அனைத்து நிறுவனங்களின் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டிப் படைக்கும் ஜியோ நிறுவனம், அனைத்து நிறுவனங்களையும் ஒரு மோசமான நிலைக்கு தள்ளியது.
எனினும் ஜியோ ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.
திக்கு முக்காட செய்த சலுகை
தனது அதிரடி சலுகையால் போட்டி நிறுவனங்களை கலங்க வைத்ததோடு, வாடிக்கையாளர்களையும் திக்குமுக்காட செய்தது. ஒரு கட்டத்தில் இலவச கால்கள், குறைந்த கட்டணததில் டேட்டா பயன்படுத்தியவர்கள், தற்போது கட்டண உயர்வு என்று அதிர்ந்தாலும், ஜியோ என்றாலே சலுகை இருக்குமே என்ற வகையில் 300 மடங்கு சலுகைகளை வாரி வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஜியோ.
ஜியோ தான் டாப்
இந்தியாவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள ஜியோ, தற்போது சுமார் 35 கோடி வாடிக்கையாளர்களுடன் உள்ளது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு துறையில் ஆகும் செலவினங்களை கருத்தில் கொண்டும்,தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, லைசென்ஸ் கட்டணம் இவற்றை கருத்தில் கொண்டு, இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளே இந்த உயர்வுக்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது.
All in One பிளான்
இந்த கட்டண உயர்விற்கு மத்தியிலும் ஜியோ All in One என்ற பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜியோ தொலைத்தொடர்பு சேவைக் கட்டணத்தை 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, 300 மடங்கு சலுகைகளையும் அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
கட்டணம் குறைவு தான்
என்னதான் மற்ற நிறுவனங்களோடு ஜியோவும் கட்டண உயர்வை செய்தாலும், இது மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது, கட்டணம் குறைவு தான். இது தவிர இன்னும் டேட்டா சலுகை என பல வகையிலும் சலுகையை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வரும் ஏர்டெல் வோடபோன் நிறுவனங்களும் தற்போது கட்டணங்களை உயர்த்தியுள்ளன. கட்டண மாற்றம் ஏதும் செய்யப்படாத நிலையிலேயே பலத்த அடியை வாங்கிய இந்த நிறுவனங்கள் தற்போது கட்டண உயர்வும் செய்துள்ளன. இனி இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.