கொரோனாவின் வருகைக்கு பின்னர் ஐடி துறையில் வளர்ச்சி விகிதமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
கொரோனாவுக்கு பிறகு டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் துறையில் பணியமர்த்தலும் அதிகரித்து வருகின்றது.
இதற்கிடையில் ஐடி துறையினரின் செலவும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஐடி துறையில் அட்ரிஷன் விகிதமானது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.
அதிக செலவு
இந்த நிலையில் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள ஐடி நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறான ஊக்கத் தொகைகள், சலுகை அறிவிப்புகள், போனஸ், பதவி உயர்வு என வாரி வழங்குகின்றன. ஒரு புறம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருவதால், அலுவலக செலவினங்கள் குறைந்தாலும், மறுபுறம் அட்ரிஷன் விகிதத்தினால் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
செலவு விகிதம் அதிகரிக்கும்.
இதற்கிடையில் அடுத்த ஆண்டில் ஐடி நிறுவனங்களின் செலவு விகிதம் 101.8 பில்லியன் டாலர்களை தொடலாம். இது நடப்பு ஆண்டினை காட்டிலும் 7% அதிகம் என கார்ட்னர் ஆய்வு கூறுகின்றது.
கொரோனாவின் வருகைக்கு பிறகு டிஜிட்டல் மாற்றம் அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் ஐடி செலவினங்கள் 91.88 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 17% அதிகம்.
ஐடி துறையில் வளர்ச்சி
ஐடி துறையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், செலவினங்களுக்கும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஐடி மற்றும் மென்பொருள் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இது 2022ம் ஆண்டில் முறையே 9.1% மற்றும் 14.4% ஆக வளர்ச்சி காணும்.
செலவு இருமடங்காகும்
நடப்பு ஆண்டினை காட்டிலும் வளர்ச்சி சற்று மெதுவான வேகத்தில் இருக்கும். ஆனால் அதேசமயம் செலவினம் இருமடங்காக அதிகரிக்கும் என கார்ட்னர் அறிக்கை கூறுகின்றது.
மேலும் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் பணியிட மாற்றம் என்பது முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என கார்ட்னர் தெரிவித்துள்ளது.
தேவை அதிகரிக்கும்
மேலும் தொழில்நுட்பத்தில் அதிகளவில் முதலீடுகள் செய்யப்படுவதால், பிரச்சனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
மேலும் கார்ட்னரின் ஆராய்ச்சித் துணைத் தலைவர் அருப் ராய் கூறுகையில், தொற்று நோயின் தாக்கத்தினால் டிஜிட்டல் தேவையானது அதிகரித்துள்ளது. இது இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம்.
புதிய தொழில்நுட்பம்
நடப்பு ஆண்டில் இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் என்பது மிக மோசமாக இருந்த நிலையில், மற்ற நாடுகளிலும் பிரச்சனை இருந்தது. எனினும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா விரைவில் மீண்டு வந்தது. தற்போதும் புதிய வகை கொரோனாவின் தாக்கம் பல நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பம் பெருகும். ஐடி நிறுவனங்களுக்கு தொடர்ந்து புதிய திட்டங்கள் கிடைக்கும்.
2021ல் செலவு
இதற்கிடையில் இந்திய அரசின் ஐடி செலவினங்கள் 2022ம் ஆண்டில் 8.6% குறையும் என தெரிவித்துள்ளது. இதுவே இந்தியாவில் 2021ல் ஐடி துறையின் செலவானது 6.8% அதிகரித்து, 88.8 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என கார்ட்னர் கூறியுள்ளது.
பணியமர்த்தல் செலவு
உலகிலேயே அதிக டிஜிட்டல் திறமை கொண்ட நாடு இந்தியா. ஆக இங்கு நவீனமயமாக்கல் மற்றும் புதுமைகளுக்கான செலவினங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் தேவையை பூர்த்தி செய்ய திறன் மிகுந்த பணியாளர்கள் தேவை. ஆக திறன் மிக்க பணியாளர்களை பணியமர்த்துவது ஐடி நிறுவனங்களின் முன்னுரிமையாக இருக்கும். ஆக இதற்கு அதிக செலவினங்களை நிறுவனங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
ஐடி நிறுவனங்களின் மாஸ் திட்டம்
மொத்தத்தில் ஐடி துறையில் திறன் மிகுந்த ஊழியர்கள், குறிப்பாக டிஜிட்டல் திறன் மிக்க ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.
ஏற்கனவே இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, காக்னிசண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்து வரும் காலாண்டுகளில் பணியமர்த்தலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக முந்தைய அறிவிப்புகளில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.