தமிழ் சினிவாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளுள் ஒருவராக திகழ்ந்த பன்முக திறமை கொண்ட கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள இல்லத்தில் மனைவி பூர்ணிமா மற்றும் மகன் சாந்தனுவுடன் பாக்யராஜ் வசித்து வந்தார்.
பாக்யராஜுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குடும்பத்தினர் அவரை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்யராஜின் குருவான இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்த 17ஆவது நாளிலேயே பாக்யராஜும் மறைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்தவர். சினிமா ஆசையில் சென்னை வந்த அவர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பாரதிராஜாவிடம் 16 வயதினிலே திரைப்படத்தில் இருந்து உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் பாக்யராஜ். 1979ம் ஆண்டில் வெளியான சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின்னர் தமிழ் சினிமாவில் கே பாக்யராஜ் ஏற்படுத்திய தாக்கங்கள் ரொம்பவே அதிகம்.
'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'இன்று போய் நாளை வா', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி நடித்தார். பாக்யராஜின் நடிப்பு, வசனம், நடனம் ஆகியவற்றுக்கு என்றே தனி ரசிகர்கள் உண்டு. குடும்பக் கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர்.

தன்னுடைய திரைக்கதை எழுதும் திறனால் இந்தியத் திரையுலகையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். பாக்யராஜ்ஜின் திரைக்கதையை பார்த்து மிரண்டு போன பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரை தனக்கு படம் இயக்கி தர வேண்டும் என கேட்டுக்கொண்ட வரலாறும் உண்டு. அதன் அடிப்படையில் ஆக்ரே ராஷ்டா என்ற இந்தி படத்தை பாக்யராஜ் இயக்கினார் அதில் அமிதாப் பச்சன் நடித்து படம் பெரிய ஹிட்டானது.
48 ஆண்டு கால திரை வரலாற்றில் 25 படங்களை இயக்கி 75 படங்களில் பாக்யராஜ் நடித்துள்ளார். ஃபிலிம் பேர், சைமா வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். 1989ஆம் ஆண்டு அரசியலிலும் இவர் கால்பதித்தார். எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் அந்த கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைந்தார். அதன் பின் திமுகவில் இணைந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக அரசியலை விட்டு விலகி இருந்தார்.
வயது முதிர்வு காரணமாக படம் இயக்குவதை நிறுத்திய பாக்யராஜ், திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்களில் மட்டுமே நடித்து வந்தார். 1990களிலேயே லட்சங்களில் சம்பளம் வாங்கியவர் பாக்யராஜ் என சொல்லப்படுகிறது. அதன்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சுமார் 10 கோடி மதிப்பில் இரண்டு வீடுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்யராஜ் தன் வாழ்க்கையில் சில புத்தகங்களை எழுதி வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நீங்க நினைச்சா சாதிக்கலாங்க, வாங்க சினிமாவை பற்றி பேசலாம், உங்கள் பாக்யராஜின் கேள்வி பதில்கள் ஆகியவை பாக்ய்ராஜின் சிறந்த புத்தகங்கள் ஆகும். பாக்கியராஜை பொறுத்தவரை திரை உலகில் நன் மதிப்பை பெற்றவர், பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர். திரைப்பட இயக்கம் தொடங்கி திரை உலகில் பலருக்கும் எப்போதும் துணை நின்றவர். அந்த வகையில் இப்படி ஒரு மனுஷன பார்க்கவே முடியாது என்ற நல்ல பெயர் தான் பாக்யராஜ் சம்பாதித்து வைத்த பெரிய சொத்து என கூறலாம்.


Click it and Unblock the Notifications

