தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான போராட்டத்தினை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோவின்( jio) வருகைக்கு பிறகு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன.
ஆரம்ப காலகட்டத்தில் ஜியோவின் அதிரடியான போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல், மற்ற நிறுவனங்கள் தவித்தன. அந்த காலகட்டத்தில் சில நிறுவனங்கள் தொலைத் தொடர்பு துறையை விட்டு வெளியேறின. எனினும் பார்தி ஏர்டெல்லும், வோடபோன் நிறுவனமும் களத்தில் ஜியோவுக்கு எதிராக நின்றன.
குறிப்பாக வோடபோன் நிறுவனம் அந்த சமயத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆரம்பத்தில் ஜியோவின் இலவச டேட்டா, இலவச கால்கள், என பல சலுகைகளுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் தவித்தன. ஆனால் விடாது முயற்சி செய்த வோடபோன் நிறுவனம் தன்னுடன் ஐடியாவையும் சேர்த்துக் கொண்டது.
வாடிக்கையாளர்கள் இழப்பு
ஆனாலும் கூட வோடபோன் ஐடியா பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது. ஏனெனில் ஜியோவின் போட்டிக்கு பதிலடி கொடுக்க முடியாமல் தவித்த நிலையில் தான், தங்களது லாபத்தினையும் மறந்து, ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனமும், ஏர்டெல்லும் பல சலுகைகளை வாரி வழங்கின. எப்படி இருப்பினும் ஜியோவின் அதிரடி சலுகைகளால் அந்த சமயத்தில் பல லட்சம் வாடிக்கையாளர்களை இவ்விரு நிறுவனங்களும் இழந்தன.
ஏஜிஆர் பிரச்சனை
இதனை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதமாக ஏஜிஆர் பிரச்சனை தலைதூக்கியது. ஏற்கனவே பல ஆயிரம் கோடி கடனுக்கு அதிபதியான ஏர்டெல்லும், வோடபோனும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நிலை குலைந்து போயின. ஏன் ஒரு கட்டத்தில் கடைக்கு பெரிய பூட்டு போடுவதை தவிர, வேறு வழியில்லை என்று கூறின. எனினும் பல போராட்டகளுக்கு பிறகு, சற்றே ஆறுதலை பெற்றன. எனினும் கூட ஜியோவின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் ஏறிக் கொண்டே போனது.
கணிசமாக அதிகரிப்பு
ஆனால் அதே நேரம், ஏர்டெல்லும், வோடபோனும் வாடிக்கையாளர்களை இழந்து கொண்டே சென்றன. ஒரு காலகட்டத்தில் சலுகைகளை வாரி இறைத்த நிறுவனங்கள், சமீபத்திய மாதங்களாக நிதானமாக ஜியோவுக்கு எதிராக களத்தில் போட்டியிட்டு வருகின்றன. சமீபத்திய மாதங்களாக ஏர்டெல் மற்றும் வோடபோனின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது.
வோடபோனின் நிலை
அதிலும் குறிப்பாக வோடபோன் நிறுவனத்தில் சந்தாதாரர்கள் கடந்த அக்டோபர் 2019க்கு பிறகு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் 14 மாதங்களுக்கு பிறகு, 1.7 மில்லியன் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே அக்டோபர் 2019ல் 55.4 மில்லியன் பயனர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டினை திரட்ட திட்டம்
இது வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு மிக சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் முதல், நிறுவனத்தினை மறுசீரமைக்கும் பொருட்டு நிதிகளை திரட்ட திட்டமிட்டு வருகின்றது. இதற்காக சாத்தியமான முதலீட்டாளர்களுடனும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.
வோடபோனின் சந்தைபங்கு
முந்தைய மாத தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வோடபோன் ஐடியா, உத்தரபிரதேச வட்டத்தில் மட்டுமே சந்தாதாரர்களை சேர்த்தது. அதே நேரத்தில் மற்ற எல்லா வட்டங்களிலும் பயனர்களை இழந்து விட்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் சந்தாரர்களின் வளர்ச்சி இருந்தபோதிலும், ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி, வோடபோனின் சந்தை பங்கு 24.58% ஆக குறைந்தது. இதே ஏர்டெல்லின் பங்கு 29.36% ஆக வளர்ச்சி கண்டது. இதே ஜியோவின் பங்கு 35.30% ஆக அதிகரித்தது. ஆக மொத்தத்தில் வழக்கம்போல ஜியோவே முதலிடத்தில் உள்ளது.
செயல்பாட்டில் எவ்வளவு பேர்?
ஆனால் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மூன்று தொலைத் தொடர்பு துறை நிறுவனங்களில், ஜியோ பெரிய அளவில் பயனர் பட்டியலை கொண்டிருந்தாலும், அதன் மொத்த பயனர் தளத்தில் 79.01% மட்டுமே செயலில் உள்ளதாக தெரிகிறது. ஆனால் வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் சந்தாதாரர்கள் முறையே 89.63% மற்றும் 97.44% செயலில் உள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.