லஞ்சம், ஊழல் ஒழிப்பு உள்ளிட்டவற்றை பிரதான வாக்குறுதியாக தந்து தான் விஜய் அரசு பெரும்பாலான மக்களின் வாக்குகளை பெற்றது. அந்த வகையில் அண்மையில் கரூர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது, இது எங்கள் விஜய் அரசு என தைரியமாக கூறுங்கள் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு , பொதுமக்கள் எளிதாக லஞ்ச புகார்களை அளிக்கும் வகையில் வாட்ஸ் அப் எண்ணை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக இந்த வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து 9498180936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அனுப்பலாம். அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில், லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகளைத் தெளிவாக வைக்குமாறு அரசு துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் எம். சாய் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

"லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்" என்ற வாசகம் அடங்கிய பலகைகளை அனைத்து அரசு அலுவலகங்களிலும் கட்டாயம் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பல அலுவலகங்களில் இவை முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த முறை இதை சரியாக செயல்படுத்தி, அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று துறை தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
9498180936 என்ற வாட்ஸ்அப் எண்,லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (DVAC) இணையதள முகவரி ஆகியவை அனைத்து அரசு அலுவலக இணையதளங்களிலும் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அதிகாரிகள் இன்னும் பழைய முறையிலேயே செயல்படுவதைக் கண்டு முதலமைச்சர் விஜய் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் இதன் காரணமாகவே லஞ்சம் புகார் தொடர்பாக நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளனர்.
பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் மட்டுமில்லாமல் கீழே உள்ள வழிகளிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்: [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
தொலைபேசி எண்கள்: 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.
நேரடி புகார்: லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண் 293, எம்.கே.என் சாலை, ஆலந்தூர், சென்னை 600016 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ புகார்களை அனுப்பலாம்.
லஞ்ச ஒழிப்பு தொடர்பான அரசின் உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள ஆய்வு பிரிவுகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

