முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் முதல்முறையாக தமிழக அரசு சார்பாக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. சென்னையில் நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு சென்னை மட்டுமில்லாமல் கோவை, ஓசூர், தூத்துக்குடி என மாவட்டங்களுக்கு பிரத்தியேகமாக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களும் வந்து முதலீடு செய்தன. இந்த முதலீடுகள் மூலம் ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் வேலைவாய்ப்புகளும் பொருளாதாரமும் பெருகின.

இந்நிலையில் விஜய் தலைமையிலான ஆட்சியில் முதல் முதலீட்டாளர் மாநாடு இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே பல்வேறு முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா, கர்நாடகாவுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டை முதலமைச்சர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறாா். இதில் முதலீடுகளை ஈா்க்கும் ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் இந்த முதலீட்டாளர் மாநாடு தொடங்க உள்ளது. முதலமைச்சர் விஜய் மாநாட்டை தொடங்கி வைக்குக்ம் நிலையில் தொழில்துறை சார்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக தொழில்துறை அமைச்சர் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் விஜயை சந்தித்தார். அப்போது மாநாட்டை தொடங்கி வைக்குமாறு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்ததாக அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முதலமைச்சர் விஜயை சந்தித்து, 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது என கூறியுள்ளார். தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், 'வெற்றி தமிழ்நாடு 2026' ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், ஏற்கனவே உள்ள முதலீடுகளை தக்க வைத்து புதிய முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை நிலைக்க செய்ய வேண்டும் என்ற கட்டாயம் விஜய் அரசுக்கு இருப்பதால் இன்றைய முதலீட்டாளர் மாநாட்டின் மீது தான் அனைவரின் பார்வையும் உள்ளது.


Click it and Unblock the Notifications

