சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தொழில் மற்றும் உற்பத்தி ரீதியாக வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த சூழலில் தான் சென்னைக்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முதல்கட்ட ஆய்வு, விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு, மத்திய அரசு மற்றும் விமான நிலைய ஆணையத்தின் அனுமதிகளும் பெறப்பட்டுவிட்டன.

முந்தைய திமுக அரசு பரந்தூர் விமான நிலைய திட்ட பணிகளை வேகப்படுத்தியது. இந்த சூழலில் தான் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தது. திமுக ஆட்சியை இழந்த நிலையில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்தது. விஜய் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்னரே பரந்தூரில் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர். போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு கூறியவர். எனவே விஜய் ஆட்சி அமைந்த உடனே பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழலில் பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க வேண்டாம் என்று தற்போதைய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என டிடி நெக்ஸ்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை அரசு தீவிரமாகத் தேடி வருகிறது என்றும் அந்த செய்தியில் கூறியுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்காக 13 கிராமங்களில் சுமார் 5,746 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமட்டது. 1700 ஏக்கர் நிலம் இதுவரை கைபற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் அரசு அமைந்தது முதல் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான புதிய நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டன என அந்த செய்தியில் குறிபிடப்பட்டுள்ளது. அரசு விரைவில் இது குறித்த முறையான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கிறது.
விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் என்ன செய்வது என்பது குறித்தும் , வேளாண் சார்ந்த தொழில்கள், உணவு பதப்படுத்தும் நிலையங்கள் அல்லது சிப்காட் தொழிற்பேட்டை போன்ற மாற்று அமைப்புகளை கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறதாம்.
இதுநாள் வரை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடிய கிராம மக்களுக்கு இது நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அரசாணைக்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் அரசு தரப்பில் இருந்து விமான நிலைய திட்டம் செயல்படுத்த மாட்டோம் என உறுதியான வாக்குறுதி வந்திருப்பதாக பேட்டி தந்துள்ளார்.
அதே வேளையில் விமான நிலையம் வரும் என்ற நம்பிக்கையில் பரந்தூர் பகுதிகளில் முதலீடு செய்திருந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான ரியஸ் எஸ்டேட் நிறுவனங்கள் விமான நிலையம் வருகிறது என கூறி பிளாட் போட்டு வைத்துள்ள நிலையில் விஜய் அரசு வந்தது முதலே ரியல் எஸ்டேட் விற்பனை மந்தமாகிவிட்டதாக கூறுகின்றன. அரசு ஒரு முறையாக அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
விஜய் அரசினை பொறுத்தவரை விமான நிலைய திட்டத்தை தொடர்ந்தால் மக்கள் மத்தியில் இருந்து பெரும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும், அதே வேளையில் திட்டத்தை கைவிட்டால் தொழில்துறையினர் அழுத்தம், உடனடியாக மாற்று இடங்களை தேட வேண்டிய கட்டாயம், தொழில் வளர்ச்சிக்கு தடங்கல் என்ற குற்றச்சாட்டு என பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.


Click it and Unblock the Notifications


