இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது லண்டனில் இருக்கும் விஜய் மல்லையா நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் அபராதம் செலுத்தி ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மல்லையா
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்திற்காக இந்தியாவில் உள்ள பல வங்கிகளிடம் ரூபாய் 9,000 கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமறைவானார்.
தப்பியோடிய குற்றவாளி
விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பியோடியாதாக கூறப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு அவர் தப்பியோடிய குற்றவாளியாக மும்பை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
மத்திய அரசு நடவடிக்கை
இந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரவும் அவரிடம் இருந்து கடனை திரும்ப பெறவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கி வழக்கு
இருப்பினும் சட்ட ரீதியாக பல சாதக அம்சங்களை விஜய் மல்லையா பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்கு திரும்பாமல் தப்பித்து வந்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது வாரிசுகளுக்கு ரூபாய் 317 கோடி பரிவர்த்தனை செய்ததாக சுப்ரீம் கோர்ட்டில் எஸ்பிஐ வங்கி வழக்கு தொடுத்தது.
தீர்ப்பு
இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததால் விஜய் மல்லையாவை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் இந்த வழக்கில் தண்டனை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை விவரங்களை நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
தண்டனை
இதன்படி தனது வாரிசுகளுக்கு 317 கோடி ரூபாய் சொத்துக்களை பரிவர்த்தனை செய்த விஜய் மல்லையாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாரிசுகளுக்கு பரிவர்த்தனை செய்த ரூ.317 கோடி தொகையை வட்டியுடன் அவர் நீதிமன்றத்தில் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் செலுத்தாத பட்சத்தில் அவருடைய சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.