தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றது. இதனை அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழக முதலமைச்சராக விஜய், மே மாதம் 10ஆம் தேதி பொறுப்பேற்றார். முதலமைச்சராக விஜய் அரியணையில் அமர்ந்து 100 நாட்கள் ஆகின்றன. இந்த 100 நாட்களில் விஜய் அரசு செய்தது என்ன, கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
திமுக, அதிமுக என பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக உருவெடுத்து மாற்றம், ஊழல் ஒழிப்பு உள்ளிட்டவற்றை முழக்கங்களாக கொண்டு தான் விஜயின் தவெக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக விஜய் பதவியேற்ற மே 10ஆம் தேதி அன்றே 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் , பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க 65 போதைப்பொருட்கள் தடுப்பு படை அமைப்பு என 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் பின்னர், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள் அருகே செயல்பட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, குறு விவசாயிகள் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய விஜய் உத்தரவிட்டார். மே 27ஆம் தேதி டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை, தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டார்.
கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச மகளிர் பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை , தமிழ்ப்புதல்வன், புதுமை பெண், காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி விஜய் அரசு அப்படியே செயல்படுத்துகிறது. இதற்கிடையே தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் முதல் அமலுக்கு வருவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

திருமணமாகும் பெண்களுக்கு திருமண நாளில் அண்ணனின் சீர் என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும் என அண்மையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 2500 ரூபாய் உதவி தொகை, அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் , இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றபடாமல் உள்ளன.
இந்த 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1,21,788 பேர் வேலைவாய்ப்பை பெறும் வகையில் 1,02 ,514 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது விஜய் அரசு. குறிப்பாக, கடந்த 13ம் தேதி வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் மட்டும் போடப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 67,452 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளன. அந்த வகையில் இதனை 100 நாட்கலுக்கு பிரித்தால் விஜய் அரசு ஒவ்வொரு நாளும் 1,020 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது என கொள்ளலாம்.
அதே வேளையில் ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளையும் விஜய் அரசும் தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேகதாது அணை விவகாரம் தலைதூக்கிய நிலையில் அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் லாக் அப் மரணங்கள், பாலியல் குற்றங்கள், மின் தடை பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இவற்றை சரி செய்ய விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. விஜய் அரசின் சில பதவி நியமனங்களும் சர்ச்சையில் சிக்கின. குறிப்பாக ஜனநாயகன் பட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கியது, அர்ச்சனா கல்பாத்திக்கு இந்துசமய அறநிலைய துறையில் பொறுப்பு என தனக்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகளை வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications

