முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதன்முறையாக மாநிலத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட ஒரு நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, ஜூன் 5ஆம் தேதி முதல் அமைச்சவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல், மதுக் கடைகளை மூடுவது, மேட்டூர் அணைத் திறப்பு மற்றும் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் , திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டம் முடிந்த கையோடு சட்டசபை கூட்ட தொடர் குறித்த அறிவிப்பு வெளியானது.

அந்த வகையில் தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூன் 18-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று வெளியிட்டார். முதல் நாள் கூட்டத்தில், தமிழக ஆளுநர் அர்லேகர் உரையாற்ற இருக்கிறார். ஆங்கிலத்தில் இடம்பெறும் அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஆளுநரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார்.
அடுத்த 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள். இதனை அடுத்த் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில், தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வழக்கமாக ஒரே பொது பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டு வந்தது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த வேளாண் பட்ஜெட், விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியிலும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் வினோத் உறுதியளித்துள்ளார்.
கும்பகோணத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியைத் தொடக்கி வைத்த பின் பேட்டி அளித்த வேளாண் துறை அமைச்சர் வினோத் கடந்த ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், வேளாண் பட்ஜெட்டில் வரப்போகும் பல அறிவிப்புகள் விவசாயிகளின் முன்னேற்றத்தை உயர்த்தும் வகையில் இருக்கும். காவிரி டெல்டா பாசனத்திற்காக வெகு விரைவில் மேட்டூர் அணையும் திறக்கப்படும் என தெரிவித்தார்.
எனவே பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் என இரண்டு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. பொது பட்ஜெட்டில் மகளிர் இலவச பேருந்து பயணம், மகளிருக்கு 2500 ரூபாய் உதவி தொகை, அண்ணன் சீர்வரிசை திட்டம், தாய்மாமன் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் அதிகபட்சம் ரூ.50,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் முழுக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து வருகிறோம். வெகு விரைவில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளிவரும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே வேளாண் படஜெட்டில் கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புய்ள்ளது. அதுமட்டுமில்லாமல் விவசாயிகள் நலன் சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


