தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று விஜயின் தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை அது கிடைக்காத சூழலில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பது, மாநிலத்தை ஆள்வது ஆகியவையே விஜய்க்கு புதிது எனும் போது கூட்டணி ஆட்சி என்றால் இன்னும் சவாலாகவே இருக்கும்.
கூட்டணி ஆட்சி மட்டுமல்ல விஜய்க்கு மற்றொரு சவாலும் இருக்கிறது. அது தான் அவர் தேர்தலில் மக்களுக்கு தந்த வாக்குறுதிகள். விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்ற திராவிட கட்சிகளை போலவே பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. தற்போது விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பது மட்டுமில்லாமல் இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு கட்டாயத்திலும் இருக்கிறார்.

அந்த வகையில் விஜய் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு எவ்வளவு பணம் தேவை, இந்த சவாலை விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். விஜயின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான சில வாக்குறுதிகளை நாம் கவனிக்க வேண்டும். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் , ஆண்டு தோறும் 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், திருமணத்திற்கு பட்டு புடவை மற்றும் ஒரு சவரன் தங்கம், சுய உதவி குழுக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன், முதியோர் , கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் நிதி உதவி என பல்வேறு வாக்குறுதிகளை விஜய் தந்திருந்தார்.
விஜயின் பெரும்பாலான வாக்குறுதிகள் பெண்களின் வாக்குகளை கவரும் அடிப்படையில் தான் இருந்தது. விஜய் அளித்திருக்கும் மொத்த வாக்குறுதிகளில் 14 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றவே அரசுக்கு 1.83 லட்சம் கோடி ரூபாய் பணம் தேவைப்படுவதாக ஒரு செய்தி குறிப்பிடுகிறது. தமிழ்நாடு அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் அளவில் 4.39 லட்சம் கோடி ரூபாய் தான். அந்த வகையில் விஜயின் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு ஆண்டுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்கின்றனர் நிதித்துறை வல்லுநர்கள்.
குடும்ப தலைவிகளுகு மாதம் 2500 ரூபாய் தரும் திட்டத்திற்கு மட்டுமே ஓராண்டுக்கு 68,150 கோடி ரூபாய் தேவையாம். ஏற்கனவே மாநிலத்தின் கடன் 9 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி சுமை கூடி கொண்டே போகும் என கூறும் நிதி வல்லுநர்கள், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றவே மாநிலத்தின் வருவாயை பல மடங்கு பெருக்க வேண்டும் என்கின்றனர்.
எனவே விஜய்க்கு வருவாயை பெருக்குவது, ஆட்சியை தக்க வைப்பது என பல சவால்கள் இருக்கின்றன. அந்த வகையில் மக்கள் மனதில் இடம் பிடித்து தேர்தலில் வென்றது முதல் படி தான். அடுத்தடுத்த படிகள் இன்னும் சவாலாக இருக்கும் அதனை முதலமைச்சர் விஜய் எப்படி எதிர்கொள்வார் என்பதற்கு காலமே பதில் சொல்லும்.


Click it and Unblock the Notifications

