சிறு வயது முதலே சிரமப்பட்டு கடும் முயற்சியால் பெரும் உச்சத்தை எட்டிய பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். அத்தகைய நபர்களுள் ஒருவர் தான் தமிழக முதல்வர் விஜய். இன்று விஜய் தனது 52 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் யாருமே அசைக்க முடியாத திரைப்பட நடிகராக உருவெடுத்தார். அதோடு மட்டும் நின்றுவிடாமல் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் கண்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.
விஜய் திரைப்பட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர். தாயார் ஒரு பின்னணி பாடகி. விஜய் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான வெற்றி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தார். அதைத் தொடர்ந்து சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான குடும்பம், நான் சிவப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு மற்றும் இது எங்கள் நீதி போன்ற பல படங்களில் சிறு வேடங்களில் தோன்றினார். இதுவே திரையுலகம் குறித்த ஆரம்பகட்ட அனுபவத்தை அவருக்கு வழங்கியது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போது விஜய்க்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? கருப்பு வெள்ளை என்னும் படத்திற்காக அவருக்கு 500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தும் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.

திரைப்பயணம்: பின்னர் விஜய் 1992-ஆம் ஆண்டில் வெளியான "நாளைய தீர்ப்பு" என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அப்படம் அவர்கள் எதிர்பார்த்து அளவு ஓடவில்லை. அந்த படத்தில் அவர் நடித்த விதத்திற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இருப்பினும் மனம் தளராது அவருடைய தந்தை 1993-ஆம் ஆண்டு வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜயை நடிக்க வைத்தார். இப்படம் வெற்றி கண்டது. அப்போதிலிருந்து விஜய்க்கான அங்கீகாரம் கிடைக்கத் தோன்றியது.
அதிலிருந்து ஒரு வருடத்திற்கு பிறகு ரசிகன் என்ற திரைப்படம் வெளியானது. இதுதான் விஜய்யின் திரைப்பயணத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது. இப்படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர் கூட்டத்தை பெற்றார். விரைவில் இளைய தளபதி என்ற பட்டமும் அவருக்கு கிடைத்தது. 1990-களில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
இதனால் 90-களின் காதல் நாயகனாக வலம் வந்தார். அதன் பிறகு 2003-ஆம் ஆண்டில் திருமலை என்ற படத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாக நடித்திருப்பார். அடுத்த ஆண்டு கில்லி திரைப்படம் வெளியானது. இது மிகப்பெரிய வெற்றி கண்டது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக மாற கில்லி திரைப்படம் அவருக்கு பெரிதும் உதவியது. அதை தொடர்ந்து போக்கிரி படம் திரையுலகில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
அடுத்த 10 ஆண்டுகளில் விஜய்யின் திரைப்படங்கள் தொடர் வசூல் சாதனை படைத்தன. துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், லியோ போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களால் தென்னிந்திய திரையுலகில் மதிப்புமிக்க திரை நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார்.
அவருடைய படங்களின் மூலம் 2009-ஆம் ஆண்டில் விஜய் மக்கள் இயக்கம் என்ற நலத்திட்ட அமைப்பு உருவானது. விஜயின் ரசிகர்கள் இணைந்து இந்த அமைப்பை நிர்வகித்தனர். பிற்காலத்தில் அவருடைய அரசியல் பயணங்களுக்கு இந்த அமைப்பே அடித்தளம் அமைத்தது. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி விஜய் அதிகாரப்பூர்வமாக "தமிழக வெற்றிக் கழகம்" என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அவருக்கென இருந்த ரசிகர் பட்டாளத்தை பயன்படுத்தி இன்று ஒரு மாபெரும் அரசியல் தலைவராக உருவாகியுள்ளார். அரசியல் பயணத்திற்காக தன்னுடைய திரை பயணத்தை முற்றிலும் தவிர்த்து விட்டார். ஜனநாயகன் திரைப்படம் தான் கதாநாயகனாக நடிக்கும் கடைசி படம் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் அவருடைய அரசியல் பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 234 தொகுதிகளில் 108 இடங்களை கைப்பற்றி TVK தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இருப்பினும் டிவிகே கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சர் பதவியேற்றார்.
இதுவரையில் எந்த கட்சித் தலைவர்களும் முதல் முறை போட்டியிட்ட தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில்லை என்ற பெருமைக்கும் ஆளானார். முன்பு 500 ரூபாய் சம்பளத்திற்காக பணியாற்றிய சிறுவன் இன்று தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சராக பதவியேற்றிருப்பதற்கு அவருடைய முயற்சி தான் காரணம் என்றால் அது மிகையாகாது.


Click it and Unblock the Notifications