தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களை கைப்பற்றியது. தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. இந்நிலையில் தான் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுடன் ஆதரவு அமைத்தது.
தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நேற்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் அர்லேகரை சந்தித்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் விஜய் இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்பார் என சொல்லப்பட்டது. ஆனால் போதிய பெரும்பான்மையை இல்லாததால் ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இந்த பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் விஜய் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது போதிய எண்ணிக்கை இல்லை என்பதை குறிப்பிட்டு ஆளுநர் தரப்பில் கேள்வி முன் வைக்கப்பட்டதாகவும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என விஜய் தரப்பில் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் - விஜய் இடையேயான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. தற்போது விஜய்க்கு 108 இடங்கள் உள்ளன, இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும், அப்படி பார்த்தால் எண்ணிக்கை 107ஆக குறையும், இந்த 107இல் ஒருவர் தற்காலிக சபாநாயகராக இருப்பார் அவர் பெரும்பான்மை வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியாது. எனவே எண்ணிக்கை 106ஆக குறைந்துவிடும் இப்போது காங்கிரஸின் 5 பேர் ஆதரவு சேர்ந்து 111 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 7 பேரின் ஆதரவு தேவை. ஒரு வேளை வாக்கெடுப்பின் சம எண்கள் வரும் போது மட்டுமே சபாநாயகர் தன் வாக்குரிமையை பயன்படுத்துவார்.
ஆனால் விஜயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா முடியாதா என்பதை ஆளுநரால் எப்படி தீர்மானிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பே உதாரணமாக காட்டப்படுகிறது. 1994-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு வழக்கான எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் இன்றுவரை இத்தகைய சூழல்களில் ஒரு "பைபிள்" போலப் பின்பற்றப்படுகிறது.
ஒரு முதலமைச்சருக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் தீர்மானிக்கக் கூடாது; அது சட்டமன்றத்தின் தளத்தில் (Floor of the House) தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. யாருக்குமே தெளிவான பெரும்பான்மை இல்லாதபோது, தனது தனிப்பட்ட விருப்புரிமையைப் பயன்படுத்தி (Discretionary Power), நிலையான ஆட்சியைத் தர முடியும் என்று கருதும் ஒருவரை ஆளுநர் அழைக்கலாம் என கூறுகிறது.
எனவே ஆளுநர் விஜய்க்கு ஆட்சி அமைக்க உரிமை தந்து பதவி பிரமாணம் செய்து வைப்பதே நியாயம் என்கின்றனர் நிபுணர்கள். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போகும் போது அடுத்த கட்ட நடவடிக்கையை பார்க்கலாம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications

