பட்டாசு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சிவகாசி தான். அதுவும் தீபாவளி பண்டிகைகளில் இந்த நகரம் பரபரப்பாக இருக்கும். இங்கிருந்து ஏராளமான ஊர்களுக்கு பட்டாசுகள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் பண்டிகைகளுக்கு தேவைப்படும் பட்டாசுகள் இங்கிருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டாசு உற்பத்தியில் முக்கிய நகரமாக திகழ்வதோடு "குட்டி ஜப்பான்" என்றும் இந்நகரம் அன்போடு அழைக்கப்படுகிறது.
இப்படி வெடிபொருள் தயாரிப்பில் முதன்மையாக விளங்கும் சிவகாசி மக்களின் தொழில்முனைவோர் ஆர்வத்தை திறம்பட பயன்படுத்த தவெக அரசு திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உலக பட்டாசு சந்தையை தன் வசம் வைத்திருக்கும் சீனாவிற்கு போட்டியாக சிவகாசியை மாற்ற திட்டமிட்டுள்ளார். இனி வரவிருக்கும் ஆண்டுகளில் சிவகாசி ஒரு உலகளாவிய பட்டாசு மையமாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகாசியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சருமான S.கீர்த்தனா கூறுகையில், "சிவகாசி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க போகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை பட்டாசுகள் மற்றும் மாற்று வேதிப்பொருட்களை கண்டறிந்து பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறையும். மேலும் சுற்றுச்சூழல் விதிகளை மதித்து அதே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சரி செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இந்தியாவின் பட்டாசு தலைநகராக மட்டுமில்லாமல் இனிவரும் காலங்களில் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் சிவகாசியை கொண்டுவர நாங்கள் இலக்க வைத்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒட்டு மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1150-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த ஆலைகளின் சந்தை மதிப்பை கூட்டிப் பார்த்தால் ரூ.6,000 கோடி இருக்கும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு அதிகமான உற்பத்தி சிவகாசியில் நடந்த போதிலும் உலகளாவிய பட்டாசு சந்தையில் சீனா தான் முதலிடம் வகிக்கிறது.
உலகநாடுகளுக்கு 90 சதவீதம் பட்டாசுகள் சீனாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சீனாவின் லியுயாங் நகரத்தில் இருந்து 70% பட்டாசுகள் உலக நாடுகளைச் சென்றடைகிறது. தற்போது இந்தியாவின் லியுயாங் நகரமாக சிவகாசி இருந்தாலும் இன்னும் உலகளவில் ஏற்றுமதி செய்வதற்கு பல விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது.
சீனாவைப் போல சிவகாசி பட்டாசு உரிமையாளர்களும் உலக நாடுகளுக்கு பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் அதற்கு பல பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளுக்கு பிரச்னையின்றி சப்ளை செய்ய முடியும் என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிபொருள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கணேசன்.
அவர் கூறுகையில் சிவகாசியில் தற்போது இயங்கி வரும் 1220 ஆலைகளில் சுமார் 400 ஆலைகள் மட்டும்தான் மாவட்ட ஆட்சியரின் உரிமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகளால் ஒரே நேரத்தில் 15 கிலோ வரையிலான பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க முடியும்.
மீதமுள்ள பெரிய பேக்டரிகளில் 500 கிலோ வரையிலான வெடிபொருட்களை தயாரிக்க முடியும். தற்போது வரையில் 8 லட்சம் தொழிலாளர்கள் இந்த அலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் வேலை பார்க்கும் பணியாளர்களில் 55 சதவீதத்தினர் பெண்கள். சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு இந்த ஆலைகள் தான் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
ஆனால் ஒலி மற்றும் மாசு கட்டுப்பாட்டை பிரச்சனைகளுக்காக உச்சநீதிமன்றம் ஒரு சில இடைக்கால தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக பட்டாசு தயாரிப்பில் ஒரு முக்கியமான கெமிக்கல் கலக்கப்படுகிறது. பேரியம் நைட்ரேட் என்று சொல்லப்படுகிற இந்த கெமிக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 60% பட்டாசு தயாரிப்பில் இந்த ஒரு கெமிக்கல் அதிகம் கலக்கப்படுகிறது. அதுபோல உற்பத்தியில் 20 சதவீதமாக இருந்த சரவெடி தயாரிப்பிற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் 80 சதவீத பட்டாசு தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே உச்ச நீதிமன்றம் மீண்டும் தடையை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினால் தான் சிவகாசி வெடி உற்பத்தி தொழிலுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும் என்று கணேஷ் கூறியுள்ளார்
சிவகாசியை உலகளாவிய பட்டாசு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு பின்னால் ஊழியர்களின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது. ஒரு சில பாதுகாப்பற்ற ஆலைகளால் இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் விவசாயம் செய்ய ஏற்ற புவியியல் அமைப்பைக் கொண்ட மாவட்டமல்ல. இதனால் வேறு வழி இன்றி மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஆபத்து என தெரிந்தும் இது போன்ற ஆலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று சிவகாசியில் அருகிலுள்ள கட்டணர்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் பிறகு ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். இவர்கள் அனைவருமே ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே சிவகாசியும் சீனாவைப் போல உலக அளவில் பட்டாசு விற்பனை மையமாக மாற வேண்டுமானால் அதற்கு அரசின் சில சீர்திருத்தங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் தேவை. அனைத்திற்கும் மேலாக தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசு கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்பதே சிவகாசி வெடி உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
