அண்மையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் 118 இடங்கள் இல்லாமல் தவெக ஆட்சி அமைப்பது இழுபறியாக இருந்தது.
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தந்தன. இதன் அடிப்படையில் தவெக ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இதனை சட்டசபையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது. 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றால் விஜய்யின் முதலமைச்சர் பதவி பறிபோய்விடும் என்ற சூழலில் சட்டப்பேரவை கூடியது. தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது கூட்டணி கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் என அனைவரும் உரையாற்றினர். அப்போது திமுக தரப்பில் பேரவையில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். முன்னதாக பேசிய அவர் புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது. எங்களின் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்கிறது என அறிவித்தார்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவெக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்தார். அதே வேளையில் எஸ்பி வேலுமணி தரப்பில் ஆதரவு தருவதாக கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. தேமுதிக சார்பில் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு விளக்கம் தரும்படி வலியுறுத்தினார். பாமக தரப்பில் வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை என சௌமியா அன்புமணி அறிவித்தார்.
முன்னதாக பேசிய எதிர்க்கட்சி , கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முன்பிருந்த மக்கள் நல திட்டங்களை தொடர வேண்டும் என கேட்டு கொண்டனர். இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய் பழைய மக்கள் நல திட்டங்களை தன்னுடைய அரசு அப்படியே தொடரும் என்றார். மேலும் குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபடுவதாக சொன்னதற்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன், குதிரை பேரத்தில் இல்லை குதிரை வேகத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என பதில் தந்தார்.
இதனை அடுத்து பகுதி வாரியாக பிரித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு ஆதரவு தருவோர் , எதிர்ப்பு தெரிவிப்போர் எண்ணிக்கை பெறப்பட்டது. தீர்மானத்தை 144 பேர் ஆதரித்து வாக்களித்தனர். பாமக, பாஜக நடுநிலை வகித்தது, திமுக வெளிநடப்பு செய்தது, எடப்பாடி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் எதிராக வாக்களித்தனர். இதனை அடுத்து தீர்மானம் வெற்றி பெற்றது என சபாநாயகர் ஜேசிடி பிரப்கார் அறிவித்தார்.
ஆதரவு 144, எதிர்ப்பு 22, நடுநிலை 5 என்ற எண்ணிக்கையில் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு விஜய் ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

