தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல படிப்பினைகளை கற்று தந்துவிட்டன. திராவிட கட்சிகளுக்கு மாற்றே இல்லை என திமுகவும் அதிமுகவும் கூறி வந்த நிலையில் மக்கள் நினைத்தால் எதையும் மாற்றுவார்கள் என உணர்த்தி இருக்கிறார்கள். அதுவும் சைலண்டாக ஒரு புரட்சியே நடந்திருக்கிறது.
நடிகர் நாடாள முடியுமா, முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் ஆக முடியுமா, அணில்கள், தற்குறிகள் என தாறுமாறாக முன் வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் இந்த தேர்தல் புறந்தள்ளி இருக்கிறது. ஆம் அந்த தற்குறிகளும், அணில்களும் செய்த தரமான சம்பவம் தான் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டு 50 ஆண்டு கால அரசியலையே மாற்றி இருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதத்தை பெற்ற எம்ஜிஆரின் அதிமுக.,வை மிஞ்சி, விஜயின் தவெக முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என வலுவாக கூறப்பட்டது கருத்து கணிப்புகளும் அவ்வாறே தெரிவித்தன. ஆனால் மக்கள் அதை எல்லாம் சுக்கு நூறாக்கி இருக்கிறார்கள். இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) முதல்முறையாக களத்தில் இறங்கியது. விஜய் தனது முதல் மாநாட்டில் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது எப்படி முதல்முறை தேர்தலில் வெற்றி பெற்றாரோ, அதேபோல், வரலாறு திரும்புகிறது; நாமும் ஆட்சி அமைப்போம் என்று பேசினார்.
அதிமுகவும், திமுகவும் விஜயை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. குறிப்பாக விஜய் ஆதரவாளர்களை அணில்கள், தற்குறிகள் என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தன. ஆனால் அவர்கள் தான் திராவிட ஆட்சிக்கே முடிவு கட்டி இருக்கிறார்கள். ஆம், எம்ஜிஆருக்கு கிடைத்தது போன்ற ஆதரவு விஜய்க்கும் கிடைத்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல் தேர்தலிலேயே அதிக தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது தவெக.
குறிப்பாக முதலமைச்சரை தன்னுடைய சொந்த தொகுதியிலேயே தோற்கடித்து தவெக வெற்றி அடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தவெக தான் முன்னிலையில் இருந்தது. நண்பகல் முதலே 100க்கும் அதிகமான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்ததோடு அடுத்தடுத்த வெற்றியையும் பெற்றது.
அந்த வகையில் முதல் தேர்தலிலேயே நாடே உற்றுநோக்கும் நபராக விஜய்யும் அவரது கட்சியும் மாறி இருக்கிறது. எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கிய 1977 சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியபோது 30.4 சதவீத ஓட்டுகளை பெற்றார். கடந்த 49 ஆண்டுகளாக அதன் பிறகு எத்தனையோ புதிய கட்சிகள் தேர்தலில் களமிறங்கின. ஆனால் அக்கட்சிகள் 10 சதவீத ஓட்டுகளைக் கூட எட்டவில்லை.
ஆனால் எம்ஜிஆரின் 30.4 சதவீத சாதனையை கட்சி துவங்கி இரண்டரை ஆண்டில் முதல் தேர்தலிலேயே தகர்த்து சாதித்துள்ளார் விஜய். தமிழக வெற்றி கழகம் 35% வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது எம்ஜிஆரையும் மிஞ்சி அதிக வாக்குகளை பெற்ற நபராக விஜயும் தமிழக வெற்றி கழகமும் மாறியுள்ளது.
மக்கள் மாற்றத்தை நோக்கி சென்றிருக்கிறார்கள் பாரம்பரிய கட்சிகளை புறக்கணித்திருக்கிறார்கள். அந்த வகையில் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் மக்கள் சக்தியை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்கு இந்த தேர்தல் முடிவுகள் சாட்சியாகியுள்ளன. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவிற்கு மட்டுமல்ல விஜயின் தவெகவும் இதனை உணர்ந்து ஆட்சி செய்வது தான் முக்கியம்.


Click it and Unblock the Notifications


