தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனை அடுத்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்துள்ளார்.
விஜய் முதலமைச்சராக பதவியேற்று கொண்ட நிலையில் , தமிழகத்தின் 17ஆவது சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் விஜய் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வருகை தந்திருந்தார் கோட் சூட் அணிந்திருந்தார்.

முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அமைச்சர்கள் ஒவ்வொருவராக எம் எல் ஏவாக பதவியேற்றனர். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட புதிய எம்எல்ஏக்கள் பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்தனர்.
சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்பில் பல சுவாரஸ்யங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தேர்தலில் வென்று விஜய் அமைச்சரவையிலும் இடம்பிடித்துள்ளார். அவர் இன்று எம்எல்ஏவாக பதவியேற்கும் போது சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருந்தார்.

விஜய் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் ஜெயலலிதாவின் தீவிர விஸ்வாசி. தவெகவில் இணைந்து அமைச்சரான போதும் சட்டைபையில் ஜெயலலிதா படத்தை வைத்திருப்பது கவனம் பெற்றது.

அதே வேளையில் , தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்எல்ஏ ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை. இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போனது. அமைச்சர் பதவியில் இருப்பவர் சட்டமன்றத்தில் முதல் நாளிலேயே இப்படி செய்யலாமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
முன்னதாக சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுப்பதற்கு வந்த வேளச்சேரி தவெக எம்எல்ஏ குமார் பக்கத்தில் இருந்தவரின் வெற்றி சான்றிதழை மாற்றி எடுத்துச் சென்றார், பின்னர் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து சான்றிதழை மாற்றி எடுத்து சென்றார்.
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்களை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் இருக்கையில் விஜய் அமர்ந்திருக்க அவருக்கு எதிரே எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்துள்ளார்.
தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்ததை இன்றைய தினம் காண முடிந்தது. 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சி புரிந்து வந்தன. ஒரு கட்சி ஆட்சியிலும் மற்றொரு கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்த நிலையில் அந்த வரலாறு மாறி இருக்கிறது. தற்போது இரண்டு திராவிட கட்சிகளும் எதிர்கட்சியாக அருகருகே அமர்ந்திருந்ததை காண முடிகிறது.
இதற்கிடையே தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார். இதற்கான படிவத்தை பேரவை செயலகத்தில் அவர் வழங்கி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

