இந்தியாவில் அதிக சம்பளம் கொடுக்கும் வேலை என்றால் நம் நினைவுக்கு வருவது ஐடி வேலைகள் தான். இதனால் தான் ஐடி வேலைக்கான மவுசு இன்னும் குறையாமல் உள்ளது. ஆனால் ஐடி வேலையையும் மிஞ்சும் ஒரு வேலை இருக்கிறது. இது தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக உள்ளது.
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களீல் வாடகை வீடு கிடைப்பது பெரிய சிக்கல், ஏனெனில் வாடகைகள் அதிகமாக உயர்ந்துள்ளன, ஆனால் அதற்கு ஏற்ற வகையில் சம்பளம் உயரவில்லை. இந்நிலையில் தான் எக்ஸ் தளத்தில் மோனலிகா பட்நாயக் என்ற பயனர் இந்தியாவில் அதிக வருமானம் தரும் வேலை என ஒரு பட்டியலை தயாரித்துள்ளார். இந்த பட்டியலில் பெங்களூரு வீட்டு உரிமையாளர் மற்றும் பிஜி உரிமையாளர்கள் முதல் இடத்தில் உள்ளன.

அந்த நபர் பெங்களூருவில் ஒரு பிஜி (PG) உரிமையாளராவது தான் எனது கனவு வேலை என கூறியுள்ளார். எந்த வேலையும் செய்யாமல், மாத இறுதியில் பெரிய அளவில் வாடகையை பெறுவதுடன், நாம் தரும் டெபாசிட் தொகையையும் திரும்ப தராமல் ஏமாற்றி விடலாம் என கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.பாரம்பரியமான கார்ப்பரேட் வேலைகள் மற்றும் தொழில்நுட்ப துறையின் உயர் பதவிகளை காட்டிலும், பெங்களூருவில் பிஜி நடத்துவதுதான் இருப்பதிலேயே அதிக லாபம் தரும் நம்பர் 1 தொழில் என்பதையே இவர் மறைமுகமாக கூறுகிறார். இந்த பதிவு லட்சக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த பதிவின் கீழ் பெங்களூருவில் வசிக்கும் மற்றும் வசித்து வந்த பலரும் தங்கள் வேதனைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர் இந்தியாவின் உண்மையான யூனிகார்ன் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்கள் அல்ல, பெங்களூரு பிஜி உரிமையாளர்கள்தான். இதில் முதலீடு ஜீரோ, லாபமோ எல்லையற்றது, வாடகை முன்பணத்துக்கு ரீஃபண்டே கிடையாது. இது ஒரு லெஜண்டரி பிசினஸ் மாடல் என கூறியுள்ளார்.
கோரமங்கலாவில் உள்ள பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களை விட பெங்களூரு பிஜி பிசினஸ் மாடல் மிக சிறந்தது என ஒரு பயனர் கூறியுள்ளார். மற்றொரு பயனர் பெங்களூருவில் பிஜி வைத்துள்ளவர்கள் அறைகளின் எண்ணிக்கையை பொறுத்து மாதந்தோறும் எளிதாக 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். அவர்கள் வசூலிக்கும் அட்வான்ஸ் தொகையுடன் இதை பெருக்கி பார்த்தால் கோடிகளில் லாபம் என குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூருவில் பல பிஜிக்களின் வாடகை, ஐடி நிறுவனங்களில் புதிதாக சேரும் ஊழியர்களின் சம்பளத்தையே மிஞ்சுவதாக இருக்கிறதாம். அதே போல வீட்டு உரிமையாளர்கள் செக்யூரிட்டி டெபாசிட் என்ற பெயரில் சட்டப்பூர்வமான பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் ஸ்டார்ட் அப் மற்றும் ஐடி தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் இந்தியா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ஐடி துறை வல்லுநர்கள் வருகை தருகின்றனர். எனவே தான் பெங்களூரு வாடகை வீடு சந்தையும் , பிஜி சந்தையும் இந்தியாவிலேயே மிகப்பெரியது.
இதனால் மற்ற நகரங்களை விட அதிக வாடகை கொண்டதாக பெங்களூரு வீடுகள் மற்றும் பிஜிக்கள் உள்ளன. இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டு வாடகையே 40,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. பிஜி என்றால் 20,000 ரூபாய் வந்துவிடுகிறது. இதற்கு அட்வான்ஸ் 1 லட்சம், 2 லட்சம் என வசூலிக்கப்படுகிறது. ஆனால் இவற்றை காலி செய்யும் போது அட்வான்ஸ் பணத்தை பெரும்பாலான உரிமையாளர்கள் திரும்ப தருவதில்லை என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


Click it and Unblock the Notifications

