இந்தியாவில் விமான நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை விமான நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், மும்பையிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமானம் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த விமானம் இயங்கும் என இந்நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஸ்தாரா ஏர்லைன்ஸ்
இந்தியாவின் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான விஸ்தாரா அக்டோபர் 1ஆம் தேதி முதல் மும்பை மற்றும் அபுதாபி இடையே நேரடி விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது விஸ்தாராவின் 12வது வெளிநாட்டு விமான சேவைத்தளம் ஆகும்.
சிறந்த சேவை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் எங்கள் இருப்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் இந்தியாவில் இருந்து சிறந்த சேவையை வழங்குவதற்காக காத்திருக்கின்றோம் என்றும் விஸ்தாராவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மும்பை - அபுதாபி
மும்பை மற்றும் அபுதாபி இடையே உள்ள இணைப்பு இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை நிறைவு செய்ய நாங்கள் உதவியாக இருப்போம் என்று நம்புகிறோம் என்று விஸ்தாரா தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஏ320 நியோ விமானங்கள்
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு முயற்சியான விஸ்தாரா ஏ320 நியோ விமானங்களை தனது சேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக கூறி உள்ளது. ஏற்கனவே துபாய்க்கு விஸ்தாரா சேவை செய்து வரும் நிலையில் தற்போது அபுதாபிக்கு சேவை செய்ய இருப்பதை அடுத்து விஸ்தாராவின் 12வது வெளிநாட்டு தளமாக அபுதாபி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
53 விமானங்கள்
விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது 41 ஏர்பஸ் ஏ320, ஐந்து ஏர்பஸ் ஏ321 நியோ, ஐந்து போயிங் 737-800என்ஜி மற்றும் இரண்டு போயிங் 787-9 ட்ரீம்லைனர்கள் உட்பட 53 விமானங்களை கொண்டதாக உள்ளது.
ஆன்லைன் முன்பதிவு
புதியதாக தொடங்கப்படும் மும்பை-அபுதாபி விமானங்களுக்கான முன்பதிவுகள் ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகள் மற்றும் பயண முகவர்கள் மூலம் தொடங்கியிருப்பதாகவும், விஸ்தாராவின் இணையதளம் மற்றும் iOS மற்றும் Android மொபைல் செயலிகள் உட்பட அனைத்து வழிகளிலும் முன்பதிவு செய்யலாம் என்றும் விஸ்தாரா தெரிவித்துள்ளது.