உலக நாடுகள் அனைத்தும் பணவீக்க உயர்வுக்கும், நாணய மதிப்பு சரிவுக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை மட்டுமே முக்கியக் காரணமாகக் கூறினாலும், ரஷ்யா எதையும் கண்டுகொள்ளாமல் அனைத்து துறையிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துகொண்டு வருகிறது.
இதன் வாயிலாக ரஷ்யாவின் நாணய மதிப்பு கடந்த 7 வருடத்தில் இல்லாத அளவிற்கு உயர்வடைந்தது. இப்படியிருக்கும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த கடுமையான தடைகளை மொத்தமாக ஓரம் கட்டி தனக்கெனப் புதிய வர்த்தகப் பாதையை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த முக்கியமான திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆசிய நாடுகள் உடன் யாருடைய துணையும், அனுமதியும் இல்லாமல் சர்வ சாதாரணமாக வர்த்தகம் செய்ய முடியும்.
விளாடிமிர் புடின்
ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின், ஈரான் வாயிலாக இந்தியா மற்றும் ரஷ்யாவை இணைக்கும் இண்டர்நேஷனல் நார்த் சௌத் டிரான்ஸ்போர்ட் காரிடார் (INSTC) திட்டத்தைச் செயல்படுத்தத் தீவிரம் காட்டி வருகிறார்.
வடக்கு மற்றும் தெற்கு பகுதி
இத்திட்டம் மூலம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து சரக்கு போக்குவரத்து நேரத்தைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இந்த வழித்தடத்தில் இருக்கும் நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் இதில் ரஷ்யாவின் பங்கு மிகவும் அதிகமாக இருக்கும் என்பது அடிப்படை காரணமாக உள்ளது.
சீனா
இந்த INSTC திட்டம் என்பது சீனாவின் BELT ROAD INITIATIVE திட்டத்தைக் காட்டிலும் மிகப் பெரியதாகவும், நன்மை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது. சீனா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அதிகப்படியான பணத்தை முதலீடு செய்து BRI திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போருக்குப் பின்
இந்த வாரம் 6வது கேஸ்பியன் கடல் மாநாட்டில் முதல் முறையாக உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மத்திய ஆசிய நாடுகள், ஈரான் உட்படப் பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
7200 கிலோமீட்டர்
அப்போது புதின் இந்தியா - ரஷ்யாவை இணைக்கும் INSTC திட்டத்தைக் குறித்துப் பேசியது மட்டும் அல்லாமல் விரைவில் முடிக்கப்பட நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இத்திட்டம் சுமார் 7200 கிலோமீட்டர் நீளம் கொண்ட வர்த்தகப் பாதை.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டூ இந்தியா
இண்டர்நேஷ்னல் நார்த் சௌத் டிரான்ஸ்போர்ட் காரிடார் (INSTC) திட்டம் என்பது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து ஈரான் மற்றும் இந்திய துறைமுகங்களை இணைக்கும். இது மட்டும் அல்லாமல் இத்திட்டத்தின் வாயிலாகக் கேஸ்பியன் கடல் பகுதியில் இருக்கும் கஜகஸ்தான் உட்படப் பல நாடுகளை விரிவான வர்த்தகச் சந்தைக்குள் இணைக்க முடியும்.
வழித்தடம்
இந்த மாத தொடக்கத்தில், ரஷ்யா செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து காஸ்பியன் துறைமுகமான அஸ்ட்ராகான் மற்றும் ஈரானிய துறைமுகமான அஞ்ஜாலி (Anzali - Iran) மற்றும் அங்கிருந்து பந்தர் அப்பாஸ் துறைமுகம் (Iran) மற்றும் அதன் பிறகு மேற்கு இந்திய துறைமுகங்களுக்கு முதல் முறையாகச் சரக்குகளை அனுப்பியது. இதைத் தான் INSTC திட்டமாக ரஷ்யா கூறுகிறது.
25 நாட்கள் மட்டுமே
இந்தச் சரக்குப் பயணத்தில் ரஷ்யா சுமார் 41 டன் எடையுள்ள 40 அடி லேமினேடெட் மரக்கட்டைகளை அனுப்பியது. இந்த வழித்தடத்தில் முதல் முறை பயணம் என்றாலும் 25 நாட்களுக்குள் பொருட்கள் சேர்க்கப்பட்டது. தற்போது பயன்படுத்தப்படும் ரஷ்யா - இந்திய வழித்தடத்தில் பொருட்களைச் சேர்க்க 40 நாட்கள் ஆகும்.
பொருளாதார வர்த்தக வளர்ச்சி
சரக்கு போக்குவரத்து நேரத்தைக் குறைப்பதைத் தாண்டி உலக நாடுகள் மத்தியில் இருக்கும் அதிகப்படியான தடைகள், நெருக்கடிகளைக் கடந்து வர்த்தகம் செய்யவும் அனைத்து நாடுகளின் பொருளாதாரம் மேம்படவும் இண்டர்நேஷ்னல் நார்த் சௌத் டிரான்ஸ்போர்ட் காரிடார் (INSTC) திட்டம் பெரிய அளவில் உதவ உள்ளது.