ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து ரஷ்ய அரசு அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதோடு பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டுக் கிளம்பினால் போது என்ற அளவுக்கு மேற்கத்திய நாடுகள் பல்வேறு வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடை விதித்து வந்தது.
இந்த நிலையில் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தை ரஷ்யா பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை அதிகப்படுத்திய காரணத்தால் அந்நாட்டில் உயிரிழப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் மத்தியில் தற்போது அதிகரித்துள்ள பதற்றமான சூழ்நிலை சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மெட்டா நிறுவனம்
இந்த நிலையில் அமெரிக்க டெக் மற்றும் சமூகவலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனத்தையும், அதன் கீழ் இருக்கும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய அனைத்தையும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்துள்ளது.
போலி பேஸ்புக் கணக்குகள்
சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் ரஷ்யா மற்றும் சீனா-வில் இருக்கும் போலியான பேஸ்புக் கணக்குகள் கொண்ட நெட்வொர்க்-ஐ தனது நிறுவன விதிமுறைகளை மீறியதாக அறிவித்து மொத்தமாக நீக்கியது. இந்தப் போலி கணக்குகள் நெட்வொர்க் தான் உக்ரைன் போர் வீடியோ மற்றும் செய்திகளை உலகம் முழுவதும் பரப்பி வருகிறது என்றும் பேஸ்புக் விளக்கம் கொடுத்தது.
மெட்டா நிறுவனம் தோல்வி
இதுகுறித்த வழக்கிலும் மெட்டா நிறுவனம் ஜூன் மாதம் தோல்வி அடைந்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் இருந்து ரஷ்ய மக்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் உள்ளனர், ஆனால் பலர் விபிஎன் பயன்படுத்தி இந்தத் தடை செய்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா
ஒருபக்கம் ரஷ்யா தனது வலிமையை அடுத்தடுத்து இழந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் முதல் வெற்றியாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க OPEC+ அமைப்பு மூலம் முடிவு எடுக்கப்பட்டது சர்வதேச பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல் உக்ரைன் மீதான அடுத்தடுத்த அதிரடி தாக்குதல் மூலம் உக்ரைன் மற்றும் அதன் நடப்பு நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
போலாந்து - பெலாரஸ்
இதோடு ரஷ்யா அடுத்த பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது, இதன் எதிரொலியாகப் பெலாரஸ்-ல் உள்ள போலாந்து குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று போலாந்து அரசு திங்களன்று கூறியது, உக்ரைன் - ரஷ்யா மத்தியில் நடந்து வரும் போரின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இத்தகைய அறிவிப்பை போலாந்து நாட்டு அரசு அறிவித்துள்ளது.