ஜியோவின் வருகைக்கு பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மிக மோசமானதொரு காலமாகவே இருந்து வருகிறது என்று கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.
ஜியோவின் வருகைக்கு முன்பே பொருளாதார மந்த நிலையின் காரணமாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மோசமான சரிவினைக் கண்டு இருந்தன.
ஜியோவின் வருகைக்கு பிறகு பல நிறுவனங்கள் அந்த சமயத்தில் காணாமல் போயின. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் ஜியோவுக்கு எதிராக களத்தில் நின்று போட்டியிட்டு வருகின்றன. ஆனால் கடுமையான நிதி நெருக்கடி, கடன் பிரச்சனையால் தத்தளித்து வருகின்றன.
தொடர் நஷ்டம்
தொடர்ந்து பல காலாண்டுகளாக நஷ்டத்தினையே கண்டு வரும் வோடபோன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் அது எதுவும் கைகொடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நஷ்டமாக 7,319 கோடி ரூபாயாக பலத்த நஷ்டத்தினை கண்டுள்ளது.
வருவாய் விகிதம்
இது முந்தைய ஆண்டை காட்டிலும் பரவாயில்லை எனலாம். ஏனெனில் முந்தைய ஆண்டில் நஷ்டம் 25,460 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் இது மார்ச் காலாண்டில் 7,022.8 கோடி ரூபாயாக இருந்தது.
இதே வருவாயானது முந்தைய ஆண்டில் 10,659.3 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் காலாண்டில் 9,152.3 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே மார்ச் காலாண்டில் 9,607.6 கோடி ரூபாயாக இருந்தது.
கொரோனாவும் ஒரு காரணம்
ஏற்கனவே மிகுந்த நெருக்கடியில் உள்ள இந்த நிறுவனம் கொரோனாவினால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் போடப்பட்ட லாக்டவுன் காரணமாக கடுமையான சரிவினைக் கண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அர்பு விகிதம் சரிவு
வோடபோன் நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கையானது மார்ச் காலாண்டில் 1.23 கோடி குறைந்த நிலையில், ஜூன் காலாண்டில் 25.54 கோடியாக குறைந்துள்ளது. அதே நேரம் அர்பு விகிதமும் கணிசமாக குறைந்துள்ளது. இது மார்ச் காலாண்டில் 107 ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் காலாண்டில் 104 ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டில் இந்த விகிதம் 114 ரூபாயாக இருந்துள்ளது.
செலவும் அதிகரிப்பு
இதே வட்டி, வரி, தேய்மானத்திற்கு முந்தைய வருவாய் 3,707.7 கோடி ரூபாயாகும். இது முந்தைய ஆண்டில் 4,098.4 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே மார்ச் காலாண்டில் 4,408.7 கோடி ரூபாயாக இருந்தது.
இதே நிறுவனத்தின் மூலதன செலவானது முதல் காலாண்டில் 9,400 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,540 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்தக் கடன்
மொத்தக் கடன் ஜூன் 30, 2021 வரையில் 1,91,590 கோடி ரூபாயாக இருந்தது. இதில் ஏஜிஆர் நிலுவை 62,180 கோடி ரூபாயாகும். இதே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை 23,400 கோடி ரூபாயாகும்.
தொடர்ந்து தனது 4ஜி கவரேஜினை அதிகரிக்க முதலீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.