வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் அதன் கட்டண அதிகரிப்பினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த நிலையில், தொடர்ந்து முதலீடுகளை திரட்ட திட்டமிட்டு வருகின்றது.
நிலவி வரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அதன் பங்குகளை அரசுக்கு விற்பனை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறை ஏற்படலாம்
இதற்கிடையில் தற்போது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி நடவடிக்கையினை தொடங்கியுள்ளன. அந்த வகையில் வோடபோன் நிறுவனம் பண பற்றாக்குறை ஏற்படலாமோ என்ற அச்சத்தின் மத்தியில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 2023ல் 9400 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்பு அதிகரிக்க வேண்டிய கட்டாயம்
இதற்கிடையில் பணப்பற்றாக்குறையை எதிர்கொள்ள நிதி திரட்டவும், அத்தோடு வருவாயினை அதிகரிக்க விரைவில் கட்டண அதிகரிப்பினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நஷ்டத்தில் இயங்கி வரும் தொலைத் தொடர்பு நிறுவனம் விரைவில் புதிய மூலதனத்தினை திரட்ட வேண்டும். அப்படி நிதி திரட்டாவிட்டால், அடுத்த 12 மாதங்களில் 9600 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்துவதற்கு, அதன் அர்பு வருவாயினை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் உள்ளது.
நிதி திரட்ட திட்டம்
கடந்த 2020ல் இருந்தே நிறுவனம் தொடர்ந்து, 20,000 கோடி ரூபாய் நிதியினை ஈக்விட்டி கடன் மூலம் திரட்ட திட்டமிட்டு வருகின்றது. இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஆதித்யா பிர்லா குழுமம் பிஎல்சி மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வழங்கியுள்ளன. எனினும் நிதித் தேவையானது இன்னும் அதிகமாக உள்ள நிலையில், இன்னும் கட்டண அதிகரிப்புக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனலாம்.
கடனை அடைக்க வேண்டிய கட்டாயம்
நிறுவனத்தின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிறுவனம் சுமார் 9600 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை அடைக்க வேண்டியுள்ளது. ஆனால் மொத்த பண இருப்போ வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. நிறுவனத்திற்கு போட்டியாளர்களைப் போல 5ஜி சேவையினை வழங்க அதிகளவில் நிதி தேவைப்படுகின்றது.
அர்பு அதிகரிப்பு இலக்கு
ஆக மூலதனத்தினை அதிகரிக்காமல் வோடபோன் நிறுவனத்தால் தனது வளர்ச்சியினை மேம்படுத்த முடியாது. ஆக செப்டம்பர் 23-க்குள் அதன் அர்பு விகிதம் 35 ரூபாய் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என கோல்டுமேன் சாச்சஸ் தெரிவித்துள்ளது. கூடுதலாக நிறுவனத்திற்கு கடனை திரும்ப செலுத்த வேண்டிய கடமையும் உள்ளது. இது மேற்கொண்டு அழுத்தத்தினை அதிகரிக்கலாம். ஆனால் வோடபோனின் செயல் திறனோ இன்னும் அழுத்தத்தில் தான் உள்ளது.
போட்டித் தன்மையுடன் இருக்கணும்
வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் போட்டியாளர்களை போல செயல்பட போட்டித் தன்மையுடன் இருக்க வேண்டும். இதற்காக மூலதன முதலீடு மற்றும் கட்டண அதிகரிப்பு என்பது கட்டாயம் இருக்க வேண்டும். போட்டி நிறுவனங்கள் 5ஜி சேவையாக செயல்பாடுகளையே தொடங்கிவிட்ட நிலையில், அதற்கான காலக்கெடுவை இன்னும் வோடபோன் நிறுவனம் கொடுக்கவில்லை.
தொடர்ந்து விரிவாக்கம்
முன்னதாக விரைவில் நிதியினை திரட்ட முடிந்தால் வோடபோன் நிறுவனம், விரைவில் அதன் 5ஜி சேவையினை வழங்க முடியும் என்று வோடபோனின் தலைமை செயல் அதிகாரி அக்ஷய மூந்திரா கூறியிருந்தார்.
இதற்கிடையில் வோடபோன் நிறுவனம் தனது சில்லறை சேவை மையங்களை விரிவாக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இது மகராஷ்டிரா, தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தனது இருப்பினை அதிகரிக்க தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எங்கு எங்கு சேவை?
இந்த சில்லறை சேவை மையங்கள் மூலம் மகராஷ்டிராவினை சேர்ந்த இந்தாபூர், தமிழ் நாட்டை சேர்ந்த உசிலம்பட்டி, கேரளாவில் பய்யோலி, மேற்கு உத்திர பிரதேசத்தினை சேர்ந்த ஹாபூர், உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மையம் பல்வேறு சலுகைகளுடன் அமையும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரைவில் நேரடியான அனைத்து சேவைகளையும், சலுகையினையும் நேரடியாக எளிதில் பெற முடியும்.