இந்திய டெலிகாம் துறையே ஒரு மந்திரித்து விட்ட கோழி போல இயங்கிக் கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கடுமையான நஷ்டம், தலை விரித்தாடும் கடன், வருவாய் சரிவு...
ஜியோ வளரும் வரை அனைவரும் தங்கள் வசதிக்கு தகுந்தாற் போல, போட்டி போட்டு ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்து வைத்துக் கொண்டார்கள்.
இன்று ஜியோ நிலையாக வளர்ந்து சுமாராக 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் பிடித்து வைத்துக் கொண்ட பின், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை ஏற்றிக் கொள்ள இருக்கிறார்கள்.
92000 கோடி
இந்த சர்ச்சைக்கு இடையில், ஜியோ உட்பட இந்தியாவில் இருக்கும் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சேர்ந்து மத்திய டெலிகாம் துறைக்குச் சுமாராக 92,000 கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கும் பாக்கித் தொகை வேறு பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. அதென்ன 92000 கோடி என்கிறீர்களா..?
கணக்கு பிணக்கு
மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு டெலிகாம் நிறுவனத்தின் வருவாய்க்கு தகுந்தாற் போல, லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்துக்கும் கட்டணங்களை நிர்ணயிப்பார்கள். அப்படி கணக்கிடும் போது, நிறுவனங்கள் ஒரு மாதிரியும், அரசு டெலிகாம் துறை வேறு ஒரு மாதிரியும் கணக்கு செய்துவிட்டார்கள். அது தான் இந்த பிரச்னையில் அடி நாதமே..!
வருவாய் கணக்கு
டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரி செய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் தான், மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு நிறுவனத்துக்குமான லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யில் எதை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எந்த வருமானத்தை எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தான் சிக்கல்.
அரசு தரப்பு கணக்கு
மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.
நிறுவனங்கள் வாதம்
ஏர்டெல், வோடபோன் ஐடியா,போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வாதாடியது. இந்த வழக்கு சுமாராக கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது.
உச்ச நீதிமன்ற கணக்கு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ஒரு பழைய டெலிகாம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய டெலிகாம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யின் படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீர்ப்பு
எனவே மத்திய டெலிகாம் துறை கணக்கிட்டு கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் + மற்ற வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே என தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இதனால் மத்திய டெலிகாம் துறை கணக்குப் படி சுமார் 92,000 கோடி ரூபாயை ஏர்டெல், வொடாபோன் ஐடியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் செலுத்த வேண்டி இருக்கிறது.
நஷ்டம்
வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஜூலை 01 2019 முதல் செப்டம்பர் 30, 2019 வரையான 92 நாட்களுக்கு வொடாபோன் ஐடியா நிறுவனம் சுமாராக 50,000 கோடி ரூபாய் நஷ்டம் என கணக்கு சொன்னது. இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச காலாண்டு நஷ்டம் என்கிற சாதனையும் படைத்தது.
அரசு தரப்பு
மத்திய அரசே இவ்வளவு பெரிய நஷ்டத்தைக் கண்டு கொஞ்சம் கதி கலங்கிவிட்டது. அரசு, இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய பாக்கி தொகையை வசூலிப்பதில் அவசரம் காட்டாது எனச் சொன்னார் நிதி அமைச்சர். ஆனால் டெலிகாம் நிறுவன தரப்போ, இதுவரை அரசிடம் இருந்து எந்த ஒரு உதவியும் வந்து சேரவில்லை எனச் மெல்ல சொல்லிக் கொண்டு தான் இருந்தார்கள்.
உரக்கச் சொல்லும் பிர்லா
இந்திய டெலிகாம் நிதி நெருக்கடியை, இன்று பகிரங்கமாக, பொது வெளியில் போட்டு உடைத்து இருக்கிறார் பிர்லா குழும நிறுவனங்களின் தலைவர் குமார மங்களம் பிர்லா. "உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின், மத்திய டெலிகாம் துறைக்குச் செலுத்த வேண்டிய பணத்துக்கு ஏதாவது நல்ல உதவி கிடைக்கவில்லை என்றால், வொடாபோன் ஐடியா கடையை இழுத்து மூட வேண்டியது தான்" என சொல்லி இருக்கிறார் பிர்லா.
கடன் சிக்கல்
ஏற்கனவே வொடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு (ஜூன் 2019 கணக்குப்படி) சுமாராக 1.2 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இதற்கு மேல் 40,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அரசுக்கு லைசென்ஸ் கட்டணமாக கொடுத்துவிட்டு எப்படி வியாபாரத்தை நடத்துவார். குமார மங்களம் பிர்லா சொல்வது போல, இந்த 40,000 கோடி ரூபாய்க்கு விலக்கு ஏதாவது கொடுத்தால் தானே வேலைக்கு ஆகும்.
பங்குச் சந்தை
வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் தலைவரே இப்படிச் சொன்ன உடன், அந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் தட தடவென பங்குகளை விற்கத் தொடங்கிவிட்டார்கள். வொடாபோன் ஐடியா பங்கு விலை, தற்போது சுமாராக 5 சதவிகிதம் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. இன்னும் இந்திய டெலிகாம் துறையை என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை.