தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு மிக மோசமானதொரு ஆண்டாகவே இருந்தது என்று கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்தன.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஜியோவின் வருகைக்கு பின்னரே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன.
ஏன் பல நிறுவனங்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயின. அந்த வகையில் பார்க்கும் போது வோடபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு எதிராக களத்தில் நின்று போட்டியிட்டு வருகின்றன.
தொடர் நஷ்டம்
தொடர்ந்து நஷ்டத்தினை கண்டு வரும் இவ்விரு நிறுவனங்களும் தொடர்ந்து பல காலாண்டுகளாக நஷ்டத்தினையே கண்டு வருகின்றன. குறிப்பாக சொல்லப் போனால் வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து ஆறாவது காலாண்டாக நஷ்டத்தினையே கண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே, இந்திய அரசு உதவாவிட்டால் கடைக்கு பூட்டு போடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியது.
பலத்த சலுகை
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிலும் வோடபோன் ஐடியா நிறுவனம் பலத்த அடிவாங்கியுள்ளது என்றே கூறலாம். இது தொடர்ந்து ஆறு காலாண்டாக பெருத்த நஷ்டத்தினை கண்டுள்ளது. இந்த நிறுவனம் ஜியோவுடன் போட்டி போட நினைத்து வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பல சலுகைகளை வழங்கியது.
போக்கிரி படத்தில் நடிகர் வடிவேல் கூறுவது போல், மண்டை மேல் உள்ள கொண்டைய மறந்துட்டனேடா என்பது போல், வோடபோன் நிறுவனம் தனது லாபத்தையும் மறந்து, வாடிக்கையாளர்களை கவர்வதில் மட்டும் கவனம் செலுத்தியது. இந்த நிலையில் தான் தொடர்ந்து ஆறாவது காலாண்டாக டிசம்பர் காலாண்டில் 6,438.8 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது.
வருவாய் வீழ்ச்சி
இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 5,004.60 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வோடபோன் ஐடியாவின் மொத்த வருவாய் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் 11,089.4 கோடி ரூபாயாக வருவாய் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டில் 11,764.8 கோடி ரூபாயாக வருவாய் கண்டிருந்ததாக பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் கூறப்படுகிறது.
செலவு அதிகரிப்பு
இதே செயல்பாடு செலவினங்கள் 10,601.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 7,668.90 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வரி, வட்டி, தேய்மானம் மற்றும் கடன் தொகுப்புக்கு முந்தைய வருவாய் மூன்றாம் காலாண்டில் 3,420.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் மூன்றாம் காலாண்டில் 1,161 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே டிசம்பர் 31, 2019 உடன் முடிவடைந்த காலாண்டில் 304 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 387.2 மில்லியனாக இருந்தது.
அர்பு வருவாய்
எனினும் இதன் சராசரி வருவாய் (ARPU) 89 ரூபாயிலிருந்து 109 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள வோடபோன் ஐடியா, இந்த வழக்கில் இன்னும் நிலுவையை செலுத்தவில்லை. இந்த நிலையில் இந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தினை கண்டு வருவது, மேலும் இந்த நிறுவனத்திற்கு நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.