உலகின் முன்னணி நிறுவனமான அமேசான், வோடபோன் - ஐடியா நிறுவனத்தில் ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இன்றைய பங்குச் சந்தையில் வோடபோன் - ஐடியா பங்குகளின் மதிப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் - ஐடியா கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை நஷ்டத்தில் தத்தளித்து வந்தது. அந்நிறுவனம் கிட்டத்தட்ட திவாலாகி விடும் என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு கை கொடுத்ததால் ஓரளவுக்கு சரி செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் வோடபோன் - ஐடியாநிறுவனம் கட்டணங்களை உயர்த்தியது என்பதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய 4ஜி சந்தாதாரர்களை பெற்றதால் தற்போது புத்துணர்ச்சியுடன் அந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமேசான்
இந்த நேரத்தில் அமேசான் நிறுவனம், வோடபோன் - ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் சுமார் 20 ஆயிரம் கோடி வோடபோன் - ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த செய்தி வெளியானதில் இருந்து இன்று காலை முதல் வோடபோன் - ஐடியா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வருகிறது. சற்று முன் வரை 5 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து ரூ.9.40 என விற்பனையாகி வருகிறது .
ஜியோ - ஏர்டெல்
கடந்த இரண்டரை ஆண்டுகளில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு இல்லாமல் செயல்படும் ஒரே நிறுவனம் வோடபோன் - ஐடியா என்ற நிலையில் தற்போது அமேசான் நிறுவனம் அந்நிறுவனத்திற்கு கை கொடுத்துள்ளது திருப்புமுனையாக கருதப்படுகிறது.
வளர்ச்சி
அமேசான் நிறுவனம், வோடபோன் - ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்வது உறுதி செய்யப்பட்டால் அந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும் இந்தியாவில் அதன் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தொலைத்தொடர்பு துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிர்லா
இதுகுறித்து வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் தலைவர் பிர்லா கூறியபோது 'நாங்கள் செய்யும் முதலீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு நியாயமான அளவு வருமானத்தை எதிர்பார்ப்போம். எந்தத் தொழிலிலும் அந்த எதிர்பார்ப்பு இருக்கும். இந்த நிலையில் தற்போது எங்களுடைய டெலிகாம் நிறுவனத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது என அமேசான் முதலீடு செய்ய இருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுமை
வோடபோன் - ஐடியா நிறுவனத்தின் இப்போதைய நிலைமை திருப்தியாக இல்லாவிட்டாலும், நாங்கள் பொறுமை காக்க தயாராக இருக்கிறோம் என்றும் நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும் என்று காத்திருக்கின்றோம் என்றும், கண்டிப்பாக வோடபோன் - ஐடியா நிறுவனம் ஒருநாள் மிகப்பெரிய அளவில் லாபத்துடன் இயங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பிர்லா தெரிவித்துள்ளார்.