இந்திய டெலிகாம் கம்பெனிகளுக்கான சனிப் பெயர்ச்சி கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது.
கடந்த அக்டோபர் 2019-ல் வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி இந்திய டெலிகாம் நிறுவனங்கள் சுமாராக 1.47 செலுத்த வேண்டி இருக்கிறது.
இந்த பணத்தை சொன்ன படி செலுத்தி ஆக வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.
முடியாது முடியாது
வொடாபோன் ஐடியா நிறுவனம், தன்னால் தற்போதைக்கு 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்த முடியும். மேற்கொண்டு இந்த வார முடிவுக்குள் இன்னொரு 1,000 கோடி ரூபாயை கொடுப்பதாகச் சொன்னது. மேலும் வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்கள்.
கோரிக்கை
இதை எல்லாம் விட மிகப் பெரிய கோரிக்கை என்ன என்றால் "வொடாபோன் ஐடியா நிறுவனம் அரசின் டெலிகாம் துறைக்கு கொடுத்து இருக்கும் பேங்க் கேரண்டியை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்திவிட்டால், வொடாபோன் ஐடியா கம்பெனியே திவால் ஆகிவிடும்" என பகிரங்கமாகக் கோரிக்கை வைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. பணத்தை செலுத்தியாக வேண்டும் என உறுதியாகச் சொல்லிவிட்டது.
தடுமாற்றம்
ஏற்கனவே ஜியோ வரவால், சில ஆண்டுகளாக, அரண்டு போய் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள், சமீபத்தில் தான் ஒற்றுமையாக தங்கள் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை அதிகரித்தார்கள். ஒருவழியாக போட்டி நிறுவனங்களின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்த உடனேயே, நம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேறு இந்திய டெலிகாம் நிறுவனங்களைக் குடைந்து கொண்டு இருக்கின்றன.
ஏர்டெல் Vs வொடாபோன்
ஏர்டெல் ஒரு மாதிரி இந்த பிரச்னைகளை சமாளித்துக் கொண்டிருப்பதால், கடந்த ஒரு வருட காலமாக ஏர்டெல்லின் பங்கு விலை ஏற்றத்தில் இருக்கிறது. ஆனால் வொடாபோன் ஐடியா இந்த பிரச்னைகளில் சொதப்பிக் கொண்டு இருப்பதால், தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டு காலமாக பங்கு விலை சரிந்து கொண்டே இருக்கிறது.
பங்கு விலை
இந்த இக்கட்டான சூழலில், இந்திய பங்குச் சந்தையில் வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் மீது, முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நம்பிக்கையின்மை அதிகரித்து இருப்பதை வொடாபோன் ஐடியா பங்கு விலையில் பார்க்க முடிகிறது. கடந்த 17 ஏப்ரல் 2015-ல் வெறும் ஐடியா நிறுவனமாக இருந்த போது, 17 ஏப்ரல் 2015 அன்று 203.90 ரூபாய் தொட்டு வர்த்தகமானது வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை.
சரிவோ சரிவு
ஒரு காலத்தில் 203 ரூபாயைத் தொட்டு வர்த்தகமான பங்கு விலை, இன்று வொடாபோன் ஐடியா ஆன பின் வெறும் 4 ரூபாய் 19 பைசாவுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதற்கு மத்தியில் கடந்த நவம்பர் 15, 2019 அன்று வெறும் 2.61 ரூபாய் என்கிற மோசமான விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
வொடாபோன் ஐடியா இணைப்பு
வொடாபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் இணைந்த தேதி 31 ஆகஸ்ட் 2018. ஆக அன்று வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகபட்சமாக 91.50 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இப்படி கணக்கு போட்டுப் பார்த்தாலும், வொடாபொன் ஐடியா நிறுவனத்தை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு பலத்த அடி கொடுத்து இருக்கிறது. 91 ரூபாய் எங்கே... 4.19 ரூபாய் எங்கே..?
சரிவு
203 ரூபாய் முதலீடு செய்து இன்று 4.19 ரூபாய்க்கு ஒருவர் பங்கை வைத்திருக்கிறார் என்றால் அது 198.81 ரூபாய் நஷ்டம். அதே போல 91 ரூபாய்க்கு இந்த பங்கை வாங்கி 4.19 ரூபாய் வைத்திருந்தால் கூட 186.81 ரூபாய் நஷ்டம். இத்தனை கொடூர நஷ்டத்தைக் கொடுத்தால் யார் பங்குகளை வாங்குவார்கள்.