இன்று இந்தியாவே விரல் நுனியில் இருக்கிறது. பணம் அனுப்புவது தொடங்கி தாத்தாவின் மரணத்துக்கு துக்கம் விசாரிப்பது வரை எல்லாமே ஆன்லைன் ஆகிவிட்டது.
ஆனால், இந்த ஆன்லைனில் எல்லா வேலைகளையும் செய்ய இணைய வசதி அவசியும் தேவை.
லாஜிக்காகப் பார்த்தால் இந்தியாவில் இணைய சேவைகள் பயங்கரமாக அதிகரிப்பதால் டெலிகாம் கம்பெனிகள் ஆயிரக் கணக்கான கோடி ரூபாயை லாபமாக ஈட்ட வேண்டும்.
எதார்த்தம்
ஆனால் இந்திய டெலிகாம் நிறுவனங்கள், தெருக் கோடியில், பஞ்சம் பிழைப்பது போல, தங்கள் வியாபாரத்தை நடத்தவே தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். காரணம்... போட்டி. ஒரு காலத்தில் ஒரு ஜிபி டேட்டாவுக்கு 150 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்த நாம், இன்று அதிகபட்சமாக ஒரு ஜிபி டேட்டாவுக்கு 5 - 8 ரூபாய் தான் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
நிறுவனங்கள் காலி
இந்த தொழில் போட்டியைத் தாங்க முடியாமலும், சில நிர்வாக ரீதியிலான சிக்கலினாலும், பல டெலிகாம் நிறுவனங்களை மூடி விட்டார்கள் அல்லது தங்கள் வியாபாரத்தை மற்றவர்களிடம் விற்றுவிட்டு வெளியேறிவிட்டார்கள். உதாரணம்: டாடா டொகொமோ, ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹட்ச், டெலினார்... என பட்டியலைப் போடலாம்.
வொடாபோன்
இப்போது, வொடாபோன் ஐடியாவுக்கும் இதே நிலை தான் காத்திருக்கிறது போல. கடந்த அக்டோபர் 2019-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஒரு பெரிய தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த செலுத்த வேண்டிய தொகையிலும் இப்போது சிக்கல் எழுந்து இருக்கிறது.
அரசு கணிப்பு
உச்ச நீதிமன்ற தீர்ப்புப் படி, வொடாபோன் ஐடியா சுமார் 53,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்கிறது அரசு தரப்பு. ஆனால் வொடாபோன் ஐடியா நிறுவனமோ 44,000 கோடி தான் செலுத்த வேண்டும் என ஒத்தைக் காலில் நிற்கிறது வோடாபோன் ஐடியா. இந்த பஞ்சாயத்தோடு இன்னொரு பஞ்சாயத்தும் இருக்கிறது
நிதி நிலை
மேலே சொன்ன தொகையில் 44,000 கோடியா அல்லது 53,000 கோடியா என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்க.. மறு பக்கம் வொடாபோன் ஐடியாவின் நிதி நிலை படு மோசமாக இருக்கிறது. 1,17,300 கோடி ரூபாய் கடன், 30,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் என கடனிலேயே தத்தளித்துக் கொண்டு இருக்கிறது வொடாபோன் ஐடியா.
வாடிக்கையாளர்கள் காலி
கடந்த நவம்பர் 2019-ம் மாதத்தில் மட்டும் வொடாபோன் ஐடியா நெட்வொர்க்கை விட்டு (Net Additions in Wireless Subscribers of Access Service Providers) 3.64 கோடி வாடிக்கையாளர்களை இழந்து இருக்கிறது. இதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ 56 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்து இருக்கிறார்கள். ஏர்டெல் 16.59 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்து இருக்கிறார்கள்.
முதலீடுகள் இல்லை
ஏர்டெல் நிறுவனம் என்ன தான் நடந்தால் அடித்துப் பிடித்து, மேலும் முதலீடு செய்து ஜியோவுக்கு இணையாக தன் நெட்வொர்க் வசதிகளை வழங்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள். முதலீடு செய்கிறார்கள். சமீபத்தில் கூட 3 பில்லியன் டாலரைத் திரட்டுவது தொடர்பாக செய்திகள் வெளியாகி இருப்பது கவனிக்கத் தக்கது. ஆனால் வொடாபோன் ஐடியா இப்படி எந்த ஒரு முதலீடுகளையும் செய்து தன் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.
சொதப்பிய பங்கு விலை
இந்திய பங்குச் சந்தையில் வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் மீது, முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நம்பிக்கையின்மை அதிகரித்து இருப்பதை வொடாபோன் ஐடியா பங்கு விலையில் பார்க்க முடிகிறது. 17 ஏப்ரல் 2015-ல் 203 ரூபாய் தொட்டு வர்த்தகமான வொடாபோன் ஐடியா பங்கு விலை, நேற்று வெறும் 4 ரூபாய் 51 பைசாவுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
நஷ்டம்
ஒரு முதலீட்டாளர்கள் 203.90 ரூபாய்க்கு வொடாபோன் ஐடியா (அப்போது ஐடியா) பங்குகளை வாங்கி இருந்தால் இன்று, 97.7 சதவிகித நஷ்டத்தைச் சந்தித்து இருப்பார். அந்த அளவுக்கு வொடாபோன் ஐடியா பங்கை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு பெருத்த நஷ்டம் மட்டும் தான் ஏற்பட்டு இருக்கிறது.
என்ன ஆகுமோ
1. பயங்கரமான கடன் + கூடுதலாக செலுத்த வேண்டிய 44,000 (அ) 53,000 கோடி கட்டணம்
2. மேற்கொண்டு வியாபாரத்தில் முதலீடு செய்யாதது
3. வொடாபோன் ஐடியாவை விட்டுச் செnற 3.65 கோடி வாடிக்கையாளர்கள்
4. 97.7% நஷ்டம் கொடுத்த வொடாபோன் ஐடியா பங்கு விலை... போன்றவைகளைப் பார்க்கும் போது, வொடாபோன் ஐடியா நிறுவனமும் டாடா டொகொமோ, யுனினார், ஹட்ச் போல யாரிடமாவது விற்று வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.