இந்திய டெலிகாம் துறையின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் AGR கட்டண நிலுவை தற்போது அரசுக்குச் செலுத்தப்படும் நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்தச் செய்தி மக்களுக்கு முழுமையாகச் சென்று அடைவதற்குள் இந்நிறுவனத்திற்கு அடுத்த பிரச்சனை வந்துள்ளது. எல்லாத்துக்கும் வாய் தான் காரணம்.
வோடபோன் ஐடியா
நாம் எல்லோருக்கும் அறிந்ததைப் போல் வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது பிரிட்டன் நாட்டின் வோடபோன் குரூப் மற்றும் ஆதித்யா பிர்லா குரூப் ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியாவில் ஏற்பட்ட டெலிகாம் புரட்சியில் இந்நிறுவனத்தின் வருமானம், வர்த்தகம் அனைத்தும் குறைந்து தற்போது மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய AGR கட்டணத்தைக் கூடச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.
முதலீடு
இந்நிலையில் வோடபோன் ஐடியா நிர்வாகம் புதன்கிழமை காலையில் மத்தி அரசு தனது AGR கட்டண நிலுவையைத் தாங்கள் கணக்கிட்ட முறையில், கணக்கிட்டு AGR அளவீட்டைக் குறைத்தால் நிச்சயம் 1.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்கிறோம் என வோடபோன் ஐடியா நிர்வாகம் தெரிவித்தது. 1.5 பில்லியன் டாலர் என்றால் கிட்டதட்ட 11,060 கோடி ரூபாய்.
தடாலடி உயர்வு
இந்தச் செய்தி முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இருந்த நிலையில் ஐடியா வோடபோன் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கினர், இதன் எதிரொலியாக இந்நிறுவன பங்குகள் 14.85 சதவீதம் வரையில் உயர்ந்து 5.57 ரூபாய்க்கு அமர்க்களமான முறையில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வந்தனர்.
உச்ச நீதிமன்றம்
இந்தச் சூழ்நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் கணக்கீடு குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது.
மத்திய டெலிகாம் துறை கணக்கீட்டின் படி வோடபோன் 58,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும், ஆனால் வோடபோன் அரசு கணக்கிட்டது சரியில்லை, நாங்கள் கணக்கிட்ட படி மத்திய அரசு நாங்கள் செலுத்த வேண்டிய தொகை 21,533 கோடி ரூபாய் மட்டும் தான் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
நீதிபதி அதிரடி
இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் கட்டணத்தைக் கணக்கிட்டது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். 20 வருடமாகக் கட்டணத்தை ஒழுங்காகக் கட்டணத்தைச் செலுத்தாமல் மக்களையும் அரசையும் ஏமாற்றித் தற்போது மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் தேடுகிறீர்களா.
நீங்கள் கடுமையாக நடந்துகொண்டால், நாங்கள் 20 வருடங்களாக ஏமாற்றியதற்காக அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் தலைவர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டி வரும். எனக் கடுமையாக எச்சரித்தார்.
தடாலடி சரிவு
உச்ச நீதிமன்றத்தின் முடிவு பங்குச்சந்தையிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதியின் அதிரடியான உத்தரவுக்குப் பிறகு வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பஹ்தகு மதிப்பு 30 சதவீதம் வரையில் சரிந்து 3.40 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.