இந்திய டெலிகாம் சந்தையின் பெரும் போட்டியில் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமான வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கும் நேரம் வந்துவிட்டது.
ஜியோ மற்றும் ஏர்டெல் மத்தியிலான போட்டியில் போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தாலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவிற்குத் திட்டம் வகுக்காத நிலையிலும், மத்திய அரசு AGR கட்டண நிலுவை தொகைக்கு அதிகப்படியான கட்டணத்தைக் கொடுத்தும் வர்த்தகத்தில் மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
டெலிகாம் சந்தை
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவை அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து இப்பிரிவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது, இதேபோல் அரசு டெலிகாம் நிறுவனமான BSNL இந்தியா முழுவதும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளையும், நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அதிவேக பிராண்ட்பேன்ட் சேவையை அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வோடபோன் ஐடியா
ஆனால் வோடபோன் ஐடியா மட்டும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் வோடபோன் ஐடியா-வை காப்பாற்ற அடுத்த சில வாரத்தில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வோடபோன் - ஆதித்யா பிர்லா குரூப்
வோடபோன் ஐடியா நிறுவனத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க அதன் தாய் நிறுவனமான பிரிட்டன் வோடபோன் மற்றும் இந்திய நிறுவனமான ஆதித்யா பிர்லா குரூப் ஜனவரி - பிப்ரவரி மாதத்திற்குள் பங்கு முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில் கடுமையான நிதியியல் முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலீடு
மத்திய அரசு வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 16,130 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கு வோடபோன் ஐடியா பங்குகளை மத்திய அரசு பெற்றுள்ளது. இந்தப் பங்குகளைத் திரும்பப் பெற வோடபோன் மற்றும் ஆதித்யா பிர்லா குரூப் ஆகியவை முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில் புதிய முதலீடுகளை இந்நிறுவனத்தால் திரட்ட முடியாது.
33 சதவீத பங்குகள்
மேலும் புதிய முதலீடுகள் செய்யாவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்கு இருப்பு 33 சதவீதமாக உயர்ந்து, அதிகப் பங்கு இருப்பு வைத்திருக்கும் அமைப்பாக மாறும்.
10000 கோடி ரூபாய்
வோடபோன் ஐடியா ப்ரோமோட்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு சுமார் 10000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தனர், ஆனால் வெறும் 4900 கோடி ரூபாய் மட்டுமே அதன் ப்ரோமோட்டர்கள் முதலீடு செய்தனர். இந்தத் தொகையும் இன்டஸ் டவர்ஸ் கட்டணத்தைச் செலுத்தப் பயன்படுத்தப்பட்டது. இதனால் புதிய முதலீடுகள் இல்லாமல் தவிக்கும் வோடபோன் ஐடியாவின் எதிர்காலம் பெரும் கேள்வி குறியாகியுள்ளது.
சிஇஓ நிக் ரீட் ராஜினாமா
இதே வேளையில் வோடபோன் சிஇஓ நிக் ரீட் தனது 4 வருட சிஇஓ பதவி காலம் முடிந்த நிலையில் இப்பதவியை விட்டு வெளியேற உள்ளார். இந்த நிலையில் வோடபோன் நிதி இயக்குனர் Margherita Della Valle இடைக்காலச் சிஇஓ-வாக நியமிக்கப்பட உள்ளார்.
எதிர்காலம் கேள்விக்குறி
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எதிர்காலம் இந்தியாவில் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், இந்தியாவில் 5ஜி சேவைக்கான போட்டி தீவிரமாகி இருக்கும் இந்த நிலையில் வோடபோன் ஐடியாவின் தாய் நிறுவனமான வோடபோன் சிஇஓ நிக் ரீட் தனது பதவியில் இருந்து வெளியேறியது பெரும் தடையாக மாறியுள்ளது.
இடைக்கால சிஇஓ
இந்த நிலையில் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ள Margherita Della Valle இந்திய வர்த்தகத்தைக் குறித்து அதிரடி முடிவு எடுப்பாரா அல்லது புதிய சிஇஓ வரும் வரையில் வோடபோன் ஐடியா காத்திருக்குமா..?