பெரும்பாலும் ஐடி நிறுவனங்களில் தான் ஊழியர்கள் பணிநீக்கம் என்ற செய்தி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது வாகன உற்பத்தி துறையிலும் ஊழியர்கள் பணிநீக்கம் தொடங்கிவிட்டது. உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமானஃபோக்ஸ்வேகன்(Volkswagen) தன் ஊழியர்களில் 1 லட்சம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து அதிர்ச்சியை தந்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோக்ஸ்வாகன். உலகளவில் இந்நிறுவன கார்கள் மிக பிரபலம். பல நாடுகளில் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர். தரமான கார்களை விற்பனை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

கிட்டதட்ட 90 ஆண்டு கால வரலாறு உடைய இந்த நிறுவனம் மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கார் உற்பத்தி ஆலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழக்க உள்ளனர்.
உலக கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு சீன நிறுவனங்கள் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. அது மட்டுமில்லாமல் உலக சந்தையில் மின்னணு வாகனங்களின் தேவை அதிகரித்தது, அமெரிக்காவின் வரிவிதிப்பு ஆகியவையும் ஃபோக்ஸ்வேகன் கார் விற்பனை சரிவுக்கு காரணமாகிவிட்டன.
குறிப்பாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சீனாவில் ஆதிக்கம் செலுத்திவந்தது. சீன சந்தையில் இதன் கார்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் சீனாவின் பிஓய்டி நிறுவனத்தின் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. பிஒய்டி கார்கள் சீனாவில் மட்டுமில்லாமல் உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. 2025ஆம் ஆண்டு வாகனங்கள் விற்பனையில் சீனாவில் போக்ஸ்வாகன் 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஃவோக்ஸ்வாகனின் முக்கிய சந்தையான ஐரோப்பிய சந்தையிலும் சீன நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகின்றன.
எனவே நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக ஃபோக்ஸ்வேகன் பணியிடங்கள் குறைப்பு, தொழிற்சாலைகள் மூடல் என அடுத்தடுத்த அதிர்ச்சியான முடிவுகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக 4 கார் உற்பத்தி ஆலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழக்க உள்ளனர்.
மேலும் அடுத்த ஐந்தாண்டுகளில் முதலீட்டை 15 சதவீதம் குறைத்து அதாவது 1,40,464 கோடி ரூபாயாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. வாகன உதிரிபாகங்கள் மற்றும் பயணிகள் கார் விற்பனை துறையை தனிதனியாக பிரிக்க உள்ளதாக ஜெர்மன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. திடீரென ஆலைகளை மூடுவது தொழிலாளர் பணிநீக்கம் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என ஏற்கனவே தொழிற்சங்கங்கள் கூறியுள்ள நிலையில் 1 லட்சம் பேர் பணிநீக்கம் என்ற முடிவை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications

