கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து கொரோனாவின் காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை நிறுவனங்கள் விற்பனையில் பெரும் சரிவைக் கண்டுள்ளது.
இது வாகன நிறுவனங்களுக்கு பெருத்த அடியாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று பல வாகன நிறுவனங்களும் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.
குறிப்பாக தள்ளுபடி, இன்சூரன்ஸ் சலுகை, இலவச சர்வீஸ் என பல சலுகைகளை வாரி இறைத்து வருகின்றன. மேலும் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து உடனடியாக கடன் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளன.
வால்வோ கார் இந்தியா
இதற்கிடையில் வங்கிகளும் தற்போது வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இவ்வாறு பல சலுகைகளும், வட்டி குறைப்பும் வாகன விற்பனையை ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வால்வோ கார் இந்தியா நிறுவனம் எல்லாவற்றையும் தாண்டி, மற்ற வாகன உற்பத்தினையாளர்களை கவலை கொள்ளும் வகையில் ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.
லைஃப்டைம் உத்தரவாதம்
மற்ற வாகன விற்பனையாளர்கள் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு வருடம் இலவச சர்வீஸ், 5 வருட இலவச சர்வீஸ், உதிரிபாகங்களுக்கு ஒரு வருட உத்தரவாதம், 5 வருட உத்தரவாதம் என கொடுத்து வருகின்றன. ஆனால் வால்வோ நிறுவனம் அதன் ஒரிஜினல் உதிரிபாகங்களுக்கு லைஃப்டைம் உத்தரவாதத்தினை கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
விற்பனை அதிகரிக்கலாம்
இதன் மூலம் வால்வோ காரினை வாங்கும் வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளுக்கு அந்த காரினை மாற்றும் நிலை ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் அந்த நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடியான அறிவிப்பு
சில நிறுவனங்கள் ஓராண்டு ஈராண்டு 5 ஆண்டுகள் என குறிப்பிட்ட காலத்திற்கே இந்த உத்தரவாதத்தை அளிக்கின்றன. இந்த நிலையில் வால்வோவின் இந்த அதிரடியான அறிவிப்பானது மிகப்பெரிய அளவில் வாகனத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவால்
உண்மையில் வாகனங்கள் உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இது மிகப்பெரிய சவாலாகவே இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வாழ்நாள் முழுக்க ஒரு வாடிக்கையாளர் இந்த காரினை வைத்திருக்கிறார் எனில், அவருக்கு உத்தரவாதம் கிடைப்பதோடு, அதில் ஏதேனும் பிரச்சனை எனில் இலவசமாக சேவையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கண்டிசன்
வால்வோவின் இந்த புதிய திட்டமானது ஒரு வாடிக்கையாளர் கார் வாங்கிய தேதியிலிருந்து, இந்த காரின் உரிமை வேறு ஒருவரின் பேருக்கு மாறாத வரையில் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கீழ் தொழிலாளர் செலவு மற்றும் உதிரிபாகங்கள் செலவு இரண்டுமே உள்ளடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்புகள் யாருக்கு?
தற்போது விற்பனைக்கு உள்ள வால்வோ கார்கள் மற்றும் வரவிருக்கும் மாடல்களாக s90 மற்றும் xc60 பெட்ரோல் கார்களுக்கு இந்த புதிய திட்டம் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது. இதுகுறித்து வால்வோ கார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்கோத்ரா கூறுகையில், இந்தியாவில் முதன்முறையாக ஆடம்பர வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் இது ஒரு தனித்துவமான சலுகையாகும்.
வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்வீஸ்
இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் கவலையற்ற ஒரு உணர்வினை கொடுக்கும். வாடிக்கையாளர்களுக்காக சிறிய பிரச்சனைகளுக்காக காரினை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நிறுவனம் வாழ்நாள் முழுவதும் உத்தரவாதத்தை அளிக்கும். இதன் மூலம் ஒரிஜினல் பாகங்களில் பிரச்சனை ஏற்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் இலவசமாக சரி செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையில் மற்ற வாகன் விற்பனையாளர்களுக்கு சவாலாக இருந்தாலும், இது விலை அதிகமுள்ள கார்களுக்கு எனும்போது, சிறிய கார் விற்பனையாளர்களை பெரியளவில் பாதிக்காது எனலாம்.