ஆடம்பர கார் பிரிவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் வால்வோ, ஸ்வீடன் நாடு நிறுவனமாக இருந்தாலும், 2010ல் சீனாவின் கீலி ஹோல்டிங் குரூப் இந்நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றி உற்பத்தி முதல் விற்பனை வரையில் அனைத்தையும் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் சீன நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் வால்வோ நிறுவனம் 2030 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்பில் இருந்து முழுமையாக வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வால்வோ நிறுவனம் முழுமையான எலக்ட்ரிக் கார் நிறுவனமாக மாற உள்ளது.
உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்
2030ஆம் ஆண்டுக்குள் உலகில் பல நாடுகளும், பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் முழுமையாக எலக்ட்ரிக் கார் பயன்பாட்டு மாற உள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்பு அடுத்த சில வருடத்தில் இருந்து வேகமாகக் குறைய உள்ளது.
2030 தான் டார்கெட்
இதேவேளையில் 2025ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் வால்வோ கார்களில் 50 சதவீதம் எலக்ட்ரிக் கார்களாகவும், 2030க்கு 100 சதவீத எலட்க்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக மாற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அமெரிக்கா Vs சீனா
அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் போல் சீனா ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உலகளாவிய எலக்ட்ரிக் கார் சந்தையைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு மாறி வருகிறது. இதனால் அடுத்த சில வருடத்தில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு உலகில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மிகப்பெரிய போட்டி உருவாகும் எனவும் கணிப்பு நிலவுகிறது.
ஜாகுவார் லேண்டு ரோவர்
சமீபத்தில் ஆடம்பர கார் பிரிவில் மற்றொரு நிறுவனமான ஜாகுவார் லேண்டு ரோவர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக 2025க்குள் முழுமையான எலக்ட்ரிக கார் தயாரிப்பு நிறுவனமாக மாற முடிவு செய்துள்ளது. ஜாகுவார் லேண்டு ரோவர் ஒரு பிரிட்டன் நிறுவனம்.
போர்டு முடிவு
இதேபோல் அமெரிக்க நிறுவனமான போர்டு தனது ஐரோப்பியத் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் கார் அனைத்தும் எலக்ட்ரிக் கார்களாக மாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதற்காக வால்வோ போலவே போர்டு நிறுவனமும் 2030ஆம் ஆண்டை இலக்காக வைத்துள்ளது.
பென்ட்லி கார் நிறுவனம்
மேலும் வோக்ஸ்வாகன் கட்டுப்பாட்டில் இருக்கும் பென்ட்லி நிறுவனமும் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக ஒரு எலக்ட்ரிக் கார் நிறுவனமாக மாறத் திட்டமிட்டு உள்ளது. கடந்த 6 மாத காலத்தில் டெஸ்லா வெற்றியைத் தொடர்ந்து ஆடம்பர கார் நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் கார் நிறுவனமாக மாற வேண்டும் என முடிவு செய்துள்ளது.