கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்த மற்றும் இந்தியாவில் பிரபலமான ஒரு பிஸ்கட் நிறுவனம் என்றால் பிரிட்டானியா தான். ஆனால் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வாடியா குடும்பம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?
இந்தியாவில் பிரபலமான அம்பானி, அதானி, டாடா, பிர்லா குடும்பங்களுக்கு மத்தியில் வாடியா குடும்பத்தின் புகழ் பெரியளவில் பரவவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் வாடியா குடும்பம் பிஸ்கட் தயாரிப்பில் இருந்து விமானச் சேவை வரையில் பல துறையில் பணியாற்றி வருகிறது.
வாடியா குடும்பம்
வாடியா குடும்பம் இந்தியாவில் 1736 ஆம் ஆண்டிலிருந்து வர்த்தகத் துறையில் இயங்கி வருகின்றனர். வாடியா குடும்பம் முகமது அலி ஜின்னா போன்ற மிகவும் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்கள் உடன் நெருக்கமாக இருந்துள்ளனர்.
பழமையான வர்த்தகச் சாம்ராஜ்ஜியம்
இது மட்டும் அல்லாமல் இந்தியாவின் பணக்கார வணிகக் குடும்பம், பழமையான வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாகவும் வாடியா குழுமம் விளங்குகிறது. இந்நிலையில் வாடியா குடும்பத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.
கப்பல் நிறுவனம்
பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியாவை உருவாக்குவதற்கு முன்பு, வாடியா குடும்பம் 1736 ஆம் ஆண்டில் கப்பல் கட்டுமானத்தில் மிகப்பெரிய ஆதிக்கத்தைக் கொண்டு இருந்தது. லவ்ஜி நுசர்வாஞ்சி வாடியா-வால் நிறுவப்பட்ட வாடியா குடும்பத்தின் கப்பல் நிறுவனம் மூலம் 355 கப்பல்களைத் தயாரித்துள்ளது, இதில் பிரிட்டிஷ் கடற்படைக்கான கப்பல்களும் அடக்கம்.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திடம் இருந்து நேரடியாக ஒப்பந்தம் பெற்றுப் பம்பாயில் (இப்போது மும்பை) கப்பல்களை உருவாக்கினார் லவ்ஜி நுசர்வாஞ்சி வாடியா.
200 வருட வரலாறு
இந்தியாவின் பழமையான வர்த்தகக் குழுமங்களில் வாடியா குழுமமும் ஒன்று. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல வர்த்தக வரலாற்றைக் கொண்டு உள்ளது வாடியா குடும்பம். உண்மையில், வாடியா குழுமத்திற்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை - பாம்பே டையிங் அண்ட் மேனுஃபேக்சரிங் கோ. லிமிடெட் மற்றும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப். லிமிடெட் (பிபிடிசி).
முகமது அலி ஜின்னா
வாடியா குழுமத்தின் தற்போதைய தலைவர் நுஸ்லி வாடியா, நெவில் வாடியா மற்றும் தினா வாடியா ஆகியோருக்கு பிறந்தவர். இதில் பலருக்குத் தெரியாதது என்னவென்றால் ஒருங்கிணைந்த இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த அரசியல்வாதி, பாரிஸ்டர் மற்றும் பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா, தினா வாடியாவின் தந்தை.
ஓரே வாரிசு
இதன் மூலம் முகமது அலி ஜின்னா, நுஸ்லி வாடியா-வின் தாய்வழி தாத்தா மற்றும் அவரது தாய்வழி பாட்டி ரத்தன்பாய் பெட்டிட் ஆவார்.
முகமது அலி ஜின்னா-வின் ஒரே குழந்தை தினா வாடியா, தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாகப் பார்சி தொழிலதிபரான நெவில் வாடியாவை மணந்தவர்.
இதன் மூலம் ஜின்னா-வின் ஓரே வாரிசாக நுஸ்லி வாடியா-வும் அவரது குடும்பமும் விளங்குகிறது.
வாடியா குடும்பம்
1952 ஆம் ஆண்டு நெவில் வாடியா அவர்கள் வாடியா குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பில் சேர்ந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, பில்லியனர் தொழிலதிபரும் வாடியா குழுமத்தின் தலைவருமான நுஸ்லி வாடியா 1977 இல் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
நெஸ், ஜஹாங்கீர் வாடியா
நுஸ்லி வாடியாவுக்கு நெஸ் வாடியா மற்றும் ஜஹாங்கீர் வாடியா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் நெஸ் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
ஜஹாங்கீர் வாடியா
நுஸ்லி வாடியாவின் மகனான, ஜெ வாடியா என்றும் அழைக்கப்படும் ஜஹாங்கீர் வாடியா, கோ பர்ஸ்ட், பாம்பே டையிங் மற்றும் பாம்பே ரியாலிட்டி ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப். லிமிடெட், வாடியா டெக்னோ - இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் பலவற்றின் இயக்குநராகவும் இருந்தார்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அனைத்து நிர்வாகப் பொறுப்பில் இருந்தும் வெளியேறிவிட்டார் ஜஹாங்கீர் வாடியா.
பாம்பே டையிங் விற்பனை
1971ல் பாம்பே டையிங் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று தந்தை மகன் மத்தியில் அதாவது நெவில் மற்றும் நுசில் வாடியா மத்தியில் பெரிய சண்டையே நடந்தது. ஆனால் ஜேஆர்டி டாடா உதவியுடன் விற்பனை நிறுத்தப்பட்டது.
பிரிட்டனியா கதை
1980களில் இந்தியாவில் பிரபலமாக இருந்த அமெரிக்காவின் RJR Nabisco Inc கட்டுப்பாட்டில் இருந்த பிரிட்டானியா நிறுவனத்தைச் சில நண்பர்கள் உதவியுடன் நுசில் வாடியா கைப்பற்றி இன்று பணத்தை வாரி வழங்கும் நிறுவனமாக மாறியுள்ளார்.
விமானச் சேவை
இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த 2000 களில் வாடியா குடும்பம் மிகவும் திட்டமிட்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 2005ல் அறிமுகம் செய்து விமானச் சேவையில் இறங்கியது. பல தடைகள், வர்த்தகப் பாதிப்புகளைத் தொடர்ந்து தற்போது கோ பர்ஸ்ட் என்ற பிராண்டில் இயங்கி வருகிறது.
60000 கோடி ரூபாய்
வாடியா குடும்பம் பல தடைகளையும், மாற்றங்களையும் தாண்டி 200 வருடங்களுக்கு அதிகமாகத் தொடர்ந்து வர்த்தகத் துறையில் வீழ்ந்து விடாமல், ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய மதிப்பீட்டில் வாடியா குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 60000 கோடி ரூபாய்.