இந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவனமாகத் திகழும் போன்பே 2023ஆம் ஆண்டுக்குள் ஐபிஓ மூலம் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் போன்பே பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் 2023ஆம் ஆண்டுக்குள் 7 முதல் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பங்குச்சந்தையில் இறங்க முடிவு செய்துள்ளது.
ஐபிஓ-வில் இறங்கும் போது பிளிப்கார்ட் குழுமத்தில் இருந்து போன்பே நிறுவனத்தைத் தனியாகப் பிரித்துப் பட்டியலிட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தை அமெரிக்காவிலா அல்லது இந்தியாவில் பட்டியலிடுவதா என்பதை ஆலோசனை செய்து வருகிறது வால்மார்ட் நிர்வாகக் குழு.
போன்பே தற்போது இந்தியாவில் பேடிஎம், அமேசான் பே மற்றும் கூகிள் பே நிறுவனங்களுடன் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றப் போட்டி போட்டு வருகிறது.
7 பில்லியன் டாலர்
மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் 2019ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், போன்பே நிறுவனம் 7 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்ததுள்ளாகத் தெரிவித்திருந்தது. மேலும் பிளிப்கார்ட் 2022ஆம் ஆண்டுப் போன்பே-வின் தாய் நிறுவனமான பிளிப்கார்ட் பங்குச்சந்தையில் இறங்க உள்ளதாகத் திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இதனால் அடுத்தடுத்த வருடம் பிளிப்கார்ட்-ன் நிறுவனங்கள் வரிசையாகப் பங்குச்சந்தையில் இறங்க உள்ளது.
லாபம்
தற்போது பிளிப்கார்ட் மற்றும் போன்பே வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும் அதிகளவில் செலவு செய்து வருகிறது. இதனால் லாபத்தைக் காட்டிலும் நஷ்டம் அதிகமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்ட வால்மார்ட் நிர்வாகம், பிளிப்கார்ட் மற்றும் போன்பே நிறுவனத்தை லாபகரமான வர்த்தக முறைக்கு வழித்தடம் அமைத்திடுங்கள் என உத்தரவிட்ட நிலையில், போன்பே 2022ஆம் ஆண்டு லாபகரமான நிறுவனமாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதன் பின்பு தான் போன்பே பங்குச்சந்தையில் இறங்க முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
தற்போது போன்பே நிறுவனத்தில் சுமார் 23 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இதில் மாதம் சராசரியாக 9 கோடி வாடிக்கையாளர்கள் போன்பே சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
போன்பே சமீபத்தில் வருமானம் மற்றும் வர்த்தக ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு 6 இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சவல் பண்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. தற்போது சுமார் 15,000 நகரங்களில் இருந்து இத்திட்டங்களில் முதலீடு குவிந்து வருவதாகப் போன்பே தெரிவித்துள்ளது.
சமீர் நிகாம்
இந்தக் கொரோனா காலத்தில் போன்பே தளத்தில் சுமார் 11 மில்லியன் வர்த்தகர்களை இணைத்துள்ளதாகவும், இதனால் தற்போது போன்பே சேலை சுமார் 5,00,000 இந்திய நகரங்களில் இருப்பதாகவும் போன்பே நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சமீர் நிகாம் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் போன்பே தளத்தில் சுமார் 20 மில்லியன் வர்த்தகர்களை இணைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் சமீர் நிகாம் தெரிவித்துள்ளார்.
ஐபிஓ
இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகம் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் அடுத்த 5 வருடத்தில் குறைந்தது 20 முதல் 30 டிஜிட்டல் வர்த்தக நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முன்னோடியாக ஜியோ டிஜிட்டல் சேவைகள் இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.