பெங்களூரு: அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான போன் பே நிறுவனத்தின் நஷ்டம், கடந்த நிதியாண்டில் இரு மடங்கு அதிகரித்து 1904.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 140 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் 791.03 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் நஷ்டம், அதிகப்படியான போட்டியினால் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பேடிஎம், கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட நிறுவனங்களால் போட்டிகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 2019ம் நிதியாண்டில் 184.22 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 42.79 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
கடந்த 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு இதுபோன்ற டிஜிட்டல் பேமென்ட்ஸ் வளர்ச்சி இந்தியாவில் மிகக் வலுவாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக போன் பே, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் வளர்ச்சி மிக நன்றாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக போன் பே கடந்த ஆகஸ்ட் 2019ல் 380 மில்லியன் பரிவர்த்தனைகளை செய்துள்ளதாகவும், இது ஜூன் காலாண்டில் 290 மில்லியன் பரிவர்த்தனைகளைக் கொண்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் போன் பே மற்றும் அமேசான் பே இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தையே கண்டுள்ளதாகவும், கடந்த 2019ம் நிதியாண்டில் அமேசான் பே 1,160.8 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே 2018ம் நிதியாண்டில் 334.2 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் இதன் வருவாய் 2018 - 2019, நிதியாண்டில் வருவாய் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 834.5 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எப்படி எனினும் வரவிருக்கும் ஆண்டுகளில் இதுபோன்ற டிஜிட்டல் பேமென்டுகளுக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் தான் இப்படி எனில், வால்மார்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ள பிளிப்கார்ட் நிறுவனமும் கடந்த 2019ம் நிதியாண்டில் 3,836.8 கோடி ரூபாய் நஷ்டத்தினை பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2063.8 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.