உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் பல நிறுவனங்கள் முழுமையான வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநில வாரியாகக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரிட்டன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 2வது முறையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வர்த்தகம் மற்றும் சேவைத் துறை முழுமையாக முடங்கியுள்ளது. இது மட்டும் அல்லாமல் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா மருந்தை முதலில் வாங்குவதற்காக அமெரிக்காவும், பிரிட்டனும் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது.
இதனால் தீம்பார்க் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்புகளையும், ஆலோசனைகளையும் எந்த நாடுகளும் செய்யவில்லை.
32,000 ஊழியர்களைப் பணிநீக்கம்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வால்ட் டிஸ்னி கோ, தனது நிதிநிலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் சுமார் 32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
வால்ட் டிஸ்னி கோ
உலகில் பல நாடுகளில் டிஸ்னி லேன்ட் என்ற பெயரில் பிரம்மாண்ட தீம் பார்க்குகளை வால்ட் டிஸ்னி கோ வைத்துள்ளது. இந்தத் தீம் பார்க்குகளில் பல பிரிவுகளில் பல லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்நிறுவனத்தின் பெரும்பாலான தீம் பார்க்குகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
எண்ணிக்கையில் உயர்வு
இதன் எதிரொலியாகச் செப்டம்பர் மாதம் 28,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்த வால்ட் டிஸ்னி கோ, தற்போது 32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பெரும் பகுதி தீம் பார்க் வர்த்தகத்தில் இருந்து இருக்கும் எனவும் வால்ட் டிஸ்னி கோ தெரிவித்துள்ளது.
2021ல் பணிநீக்கம்
வால்ட் டிஸ்னி கோ தற்போது திட்டமிட்டுள்ள 32,000 ஊழியர்கள் பணிநீக்கத்தை 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் செய்ய உள்ளதாகப் பங்குச்சந்தைக்குத் தெரிவித்துள்ளது.
வால்ட் டிஸ்னி கோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் இந்நிறுவன ஊழியர்கள் பயத்திலும், சோகத்திலும் உள்ளனர்
முக்கியத் தீம் பார்க்குகள்
வால்ட் டிஸ்னி கோ நிறுவனத்தின் தென் கலிப்போர்னியாவில் தீம் பார்க் திறக்க மாநில அரசு எவ்விதமான அனுமதியும் கொடுக்காத நிலையில் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. மேலும் ப்லோரிடாவில் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியில் இருக்கும் தீம் பார்க்-கள் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஷாங்காய், ஹாங்காங் மற்றும் டோக்கியோ ஆகிய நாடுகளில் தீம் பார்க்-கள் முழுமையாக இயங்கி வருகிறது.
இந்தியா
இந்தியாவில் சில தீம் பார்க்குகள் பல விதமான கட்டுப்பாடுகள் உடன் தள்ளுபடி விலையில் நீண்ட காலத்திற்குப் பின் மீண்டும் மக்களைக் கொண்டாட அழைத்துள்ளது.