கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் பல நிறுவனங்கள் பணி நீக்கம் என்றும் ஆயுதத்தினை கையில் எடுத்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம், ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் 32,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த நிறுவனம் உலகின் பல இடங்களிலும் பிரமாண்டமான தீம் பார்க்குகளை வைத்துள்ளது. இந்த தீம் பார்க்குகளில் பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, உலகின் பல நாடுகளும் லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. அதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், சுகாதாரத்தினை பின்பற்றவும் அறிவுறுத்தி வருகின்றன. இன்னும் சில நாடுகளில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவால், அத்தியாவசியம் தவிர, மற்ற செலவுகளை குறைத்து வருகின்றனர்.
இதனால் கேளிக்கை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் பெரும்பாலும் முடக்கத்தில் தான் உள்ளன. ஏனெனில் இந்த நிறுவனங்களுக்கு முற்றிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு வர இன்னும் சிறிது காலம் ஆகும். அதோடு மக்கள் கையில் பணப்புழக்கம் கொரோனாவுக்கு முன்பு போல் வரவும் இன்னும் சிறிது காலம் ஆகும். இதனால் வால்ட் டிஸ்னி போன்ற பொழுது போக்கு அம்சம் நிறைந்த நிறுவனங்கள், மீண்டு வரவும் சிறிது காலம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான், ஏற்கனவே 32,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 4,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 28,000 பேரை பணி நீக்கம் செய்ய போவதாக இந்த நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் 4000 பேரை பணி நீக்கம் செய்வதாக தற்போது கூறிய நிலையில், எத்தனை பேர் கலிபோர்னியா, புளோரிடாவில் எத்தனை பேர் என்று தெளிவாக கூறப்படவில்லை.
இது இந்த நிறுவனம் செலவினங்களை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஏனெனில் தற்போது சில இடங்களில் தீம் பார்க்குகள் திறக்கப்பட்டாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக குறிப்பிட்ட அளவுள்ள ஆட்களை மட்டும் அனுமதிக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே இந்த தீம் பார்க்குகள் மூடப்பட்டன. தற்போதும் கூட பல இடங்களில் அரசின் அனுமதிக்காக காத்துக் கொண்டு இருப்பதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.