உலகளவில் கிரிப்டோ சந்தை மிகவும் மோசமான நிலையை அடைந்த நிலையில் கிரிப்டோ முதலீட்டாளர்களும் சரி, கிரிப்டோ நிறுவனங்களும் சரி மோசமான வர்த்தக நிலையை அடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிப்டோ வர்த்தகத் தளமான WazirX பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் தனது 40 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தச் செய்து சக கிரிப்டோ நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார மற்றும் வர்த்தகப் பாதிப்பு
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் வர்த்தகப் பாதிப்பால் முதலீட்டு சந்தை தலைகீழாக மாறியுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தைத் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் மோசமான நிலையை எதிர்கொண்டு உள்ளது.
கிரிப்டோ சந்தை
இதேபோல் கிரிப்டோ சந்தையில் முதலீட்டு அளவுகளும், முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகள் பக்கம் திரும்பியுள்ளனர்.
WazirX
இப்படிப் பல்வேறு காரணங்களால் மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு இருக்கும் WazirX செலவுகளைக் குறைக்கும் விதமாகச் சுமார் 40 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் சில உயர் அதிகாரிகள் வெளியேறிய நிலையில் தற்போது பெரும் பகுதி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
70 ஊழியர்கள் பணிநீக்கம்
WazirX நிறுவனத்தில் 150 பேர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 50 முதல் 70 ஊழியர்கள் வரையில் பணிநீக்கம் செய்யப் பிங்க் சிலிப் கொடுக்கப்பட்டு உள்ளதாகக் காயின்டெக்ஸ் தெரிவித்துள்ளது. தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் 45 நாள் severance pay அளிக்கப்பட்டு, அலுவலகத்திற்கு நாளை முதல் வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
வரிப் பிரச்சனை
சர்வதேச பொருளாதாரச் சந்தையின் காரணமாகக் கிரிப்டோ சந்தை மோசமாக இருக்கும் நிலையில், பிற நாடுகளில் இல்லாத பிரச்சனை இந்தியாவில் உள்ளது. மத்திய அரசு கிரிப்டோ மீது அதிகப்படியான வரியை விதித்த பின்பு முதலீடுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.