2020ல் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அமைப்பு வரி செலுத்த அதிகளவிலான கால அவகாசம் கொடுத்தது. மேலும் இக்காலகட்டத்தில் மத்திய அரசின் வரி வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசுக்கு வருமான வரி செலுத்த அனைவரையும் கௌரவப்படுத்தும் விதமாக வருமான வரித் துறை முக்கியமான ஈமெயில் அனுப்பியுள்ளது.
இந்த மின்னஞ்சலில் வருமான வரித் துறை, வரி செலுத்தியவரைக் கண்டு பெருமைகொள்வதாகத் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த நேரத்திற்குள் வருமான வரி செலுத்திய அனைவருக்கும் Proud Filer என்கிற சிறப்புப் பேஸ்புக் பேட்ஜ்-ஐ கொடுத்துள்ளது.
இந்தப் பேட்ஜ்-ஐ பேஸ்புக் ப்ரொஃபைல் பிக்சரில் சேர்க்க வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் பிறரும் வருமான வரியைச் செலுத்தவும், வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யவும் தூண்டுதலாக இருக்கும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் Proud Filer என்கிற சிறப்புப் பேஸ்புக் பேட்ஜ்-ஐ பேஸ்புக் ப்ரொஃபைல் பிக்சரில் சேர்க்க வழிமுறையையும் கொடுத்துள்ளது வருமான வரித்துறை.
படி 1: பேஸ்புக் மொபைல் ஆப்-ஐ திறக்கவும்
படி 2: உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை கிளிக் செய்து Add Frame என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
படி 3: இதில் Proud Filer என்கிற சிறப்புப் பேட்ஜ்-ஐ தேடுங்கள்.
படி 4: கிளிக் செய்து சேமித்திடுங்கள்.
வருமான வரித்துறை நடப்பு ஆண்டில் கொரோனா பாதிப்புக் காரணமாக 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய ஏற்கனவே டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், வருமான வரித்துறை நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் மீண்டும் கால நீட்டிப்பு செய்துள்ளது.
இதன் படி 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யத் தனிநபர் பிரிவுக்கு 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 10, 2021 வரையிலும், நிறுவனங்களுக்கு ஜனவரி 31 கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது 15 நாட்கள்
நீட்டிக்கப்பட்டுப் பிப்ரவரி 15, 2021 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.