மார்ச் 2020 முதல் கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் பல திருமணங்கள் ஒத்துவைக்கப்பட்டது, பல திருமணங்கள் உறவினர்களை அழைக்காமல் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது, பல திருமணங்கள் வீட்டிலேயே நடந்தது.
இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு நடந்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை திடீர் லாக்டவுன் அறிவிப்பால் பலர் தனது மகள், மகனின் திருமணத்தைப் பிரம்மாண்டமாகத் திட்டமிட்டு அனைத்தையும் ரத்து செய்ய வேண்டிய நிலை உருவானது.
திடீர் லாக்டவுன் அறிவிப்பு
மோடி அரசின் திடீர் லாக்டவுன் அறிவிப்பு பலரின் கனவு திருமணத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து குறைந்த காரணத்தால் 2021ஆம் ஆண்டின் திருமணங்கள் அதிகம் நடக்கும் மிக முக்கியமான காலகட்டமான நவம்பர் - டிசம்பரில் பல லட்சம் திருமணங்கள் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி அளவு கூட உச்சத்தை அடைந்தது.
ஒமிக்ரான் தொற்று
இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த வேளையில் 2022 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் அதிகப்படியான திருமணங்கள் நடக்கும் அதை எதிர்கொள்ள வந்துள்ள திட்டம் தான் வெட்டிங் இன்சூரன்ஸ் (திருமணக் காப்பீடு).
மீண்டும் லாக்டவுன்
ஒமிக்ரான் தொற்று பரவல் இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் காரணத்தால் நாட்டில் பல மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியுள்ளது. இதனால் எப்போது எந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது.
பிரச்சனை
இந்தச் சூழ்நிலையில் திருமணத்தைத் திடீரென நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் யாராலும் தடுக்க முடியாது, அதேவேளையில் வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கும் திருமணத்தைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பது தவறில்லை.
வெட்டிங் இன்சூரன்ஸ்
ஆனால் இரண்டும் முரண்பட்ட ஒன்றாக இருக்கும் வேளையில் மக்களைக் காப்பாற்ற வந்துள்ள புதிய திட்டம் தான் திருமணக் காப்பீடு எனப்படும் வெட்டிங் இன்சூரன்ஸ். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது மூலம் கிடைசி நேரத்தில் லாக்டவுன் காரணமாகத் திருமணம் நடக்காமல் போனால் திருமண ஏற்பாடுகளுக்குச் செய்யப்பட்ட செலவுகளை இன்சூரன்ஸ் மூலம் பெற முடியும் என்பது தான் இத்திட்டத்தின் சிறப்பு.
ப்ரீமியம் தொகை
திருமணக் காப்பீட்டுக்கான தொகை உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்த நீங்கள் முடிவு செய்துகொள்ள முடியும். அதாவது Sum Assured அளவை நிர்ணயம் செய்வது மூலம் ப்ரீமியம் தொகையை நிர்ணயம் செய்ய முடியும்.
காப்பீட்டில் வசூலிக்கப்படும் பிரீமியம், மொத்த காப்பீட்டுத் தொகையில் 0.7- 2 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும்.
உதாரணமாக நீங்கள் ரூ.10 லட்சம் திருமணக் காப்பீடு பெற்றிருந்தால், ரூ.7,500 முதல் 15,000 வரை பிரீமியம் செலுத்த வேண்டும்.
4 பிரிவுகள்
பொறுப்புகளின் கவரேஜ்: திருமண விழாக்களின் போது மூன்றாம் தரப்பினருக்கு விபத்துகள் அல்லது காயங்கள் காரணமாக ஏற்படும் சேதம் அல்லது இழப்பை இந்தப் பிரிவு உள்ளடக்கும்.
திருமணம் ரத்துசெய்தல் கவரேஜ்: திடீரென அல்லது எதிர்பாராத விதமாகத் திருமணத்தை ரத்து செய்வதால் ஏற்படும் இழப்பை இந்தப் பரிவு ஈடுசெய்கிறது.
சொத்துச் சேதம்: இது திருமண நிகழ்வுகளின் போது சொத்து இழப்பு அல்லது சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
தனிப்பட்ட விபத்து: விபத்துக்களால் மணமகன்/மணமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவும் இதில் அடங்கும்.
முக்கியச் செலவுகளுக்குக் கவரேஜ்
திருமணக் காப்பீடு பின்வரும் செலவுகளுக்குக் கவரேஜை வழங்குகிறது:
- கேட்டரிங் செய்வதற்காக வழங்கப்படும் முன்பணம்
- திருமண இடத்திற்கு வழங்கப்படும் முன்பணம்
- ட்ராவல் ஏஜென்சிகளுக்கு வழங்கப்படும் முன்பணம்
- ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்வதற்கு வழங்கப்படும் முன்பணம்
- திருமண அழைப்பிதழ் அச்சிடுவதற்கான செலவு
- இசை மற்றும் அலங்காரத்திற்காக வழங்கப்படும் முன்பணம்
- அலங்காரங்களுக்கான செலவு மற்றும் திருமணச் செட்
இதற்கு இன்சூரன்ஸ் பொறுப்பு அல்ல
தீவிரவாத தாக்குதல், வேலைநிறுத்தம்/அமைதியின்மை, மணமகன்/மணமகள் கடத்தல், திருமண விருந்தினரின் ஆடை சேதம், திருமணத்தின் போது தனிப்பட்ட நபரின் சொத்துக்களில் ஏற்படும் இழப்பு, திருமண இடம் திடீரெனக் கிடைக்காதது, வாகனம் பழுதடைதல், திருமண இடத்தைச் சேதப்படுத்துதல் அல்லது சேதப்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளில் திருமணக் காப்பீடு உரிமை கோரப்படாது.