மும்பை: ஒரு நல்ல வேலை, அளவான நல்ல சம்பளம். அதிக சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ பலருக்கும் ஆசை இருந்தாலும், அப்படிப்பட்ட வாழ்க்கை மிக மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.
அன்பான கணவன் / மனைவி, அழகான குழந்தைகள், சனிக்கிழமை காலையில் எண்ணெய் குளியல், மாலையில் குழந்தைகளுடன் ஷாப்பிங் கோவில்.. சோம்பலான ஞாயிற்றுக்கிழமை மதியம் மணக்க மணக்கமட்டன் குழம்பு, மாலையில் மனைவி குழந்தை உடன் சினிமா செல்வது... எல்லாம் விசு சார் படத்தில் மட்டுமே வரும் காட்சிகளாகிவிட்டது.
ஆனால் அப்படி வாழ, மகாராஷ்டிர அரசு ஊழியர்களுக்கு, மகாராஷ்டிர அரசு ஒரு வழி செய்து இருக்கிறது.
5 வேலை நாட்கள்
வரும் பிப்ரவரி 29, 2020 முதல் மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்கள், வாரத்துக்கு ஐந்து நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதுமாம். மீதமுள்ள சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரண்டு நாட்கள் விடுமுறையாம். இது மகாராஷ்டிரா அரசில் அதிகாரிகள் தொடங்கி கடை நிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் பொருந்துமாம்.
முடிவு
இந்த வாரத்துக்கு ஐந்து வேலை நாட்கள் முடிவை, மகாராஷ்டிர மாநிலத்தின் கேபினெட் அமைச்சரவைக் கூட்டத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் எடுத்து இருக்கிறார்களாம். இதனால் சுமார் 20 லட்சம் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன் பெற இருக்கிறார்களாம்.
இவர்களும் உண்டு
யாருக்கு எல்லாம் இந்த வாரத்துக்கு ஐந்து வேலை நாட்கள் அறிவிப்பு பொருந்தும் என்று கேட்டால், அரசு அமைப்புகள், அரசு உதவி பெறும் அமைப்புகள், லோக்கல் பாடிக்கள் போன்ற மகாராஷ்டிராவின் அரசு சார்ந்த எல்லாம் அமைப்புகளுக்கும் பொருந்தும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஊழியர்கள்
பொதுவில், புதிதாக ஒரு அரசு அமைகிறது என்றால், அரசு ஊழியர்களை தங்கள் பக்கம் இழுக்க சம்பள உயர்வு போன்றவைகளை, அரசியல் கட்சிகள் கையில் எடுக்கும். நம் உத்தவ் தாக்கரே, விடுமுறையைக் கையில் எடுத்து இருக்கிறார். எப்படியோ, வாரத்தில் ஐந்து வேலை நாட்கள் முறையைக் கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் உத்தவ் சார்.